பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் பேர் எழுதினர்




அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர்களுக்கான போட்டித் தேர்வு திட்டமிட்டபடி நேற்று நடந்தது.



இந்த தேர்வில் 41 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 1351 பேர் தேர்வு எழுத வரவில்லை. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பதவிகளை நிரப்ப போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் 25ம் தேதி வெளியிட்டு இருந்தது.


 பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான காலிப் பணியிடங்கள் தற்போது 2,222 உள்ளன.கடந்த மாதம் 7ம் தேதி நடக்க இருந்த தேர்வு மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 4ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.


 காலிப்பணியிடங்களில் பள்ளிக் கல்வியில் 2,171 இடங்களும், மிகவும் பிற்பட்டோர் நலத்துறையில் 23, ஆதிதிராவிடர் நலத்துறையில் 16, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் 12 இடங்கள் உள்ளன. மேற்கண்ட பணியிடங்கள் துறை வாரியாகவும், பாட வாரியாகவும், இட ஒதுக்கீடு வாரியாகவும் கூடிய விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் வெளியிடப்பட்டது.


தேர்வில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் சுமார் 41 ஆயிரத்து 485 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கிடையே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 100க்கும் மேற்பட்ட பட்டதாரிகள், தங்களுக்கு தமிழ் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இந்த வழக்கை நீதிமன்றம் பரிசீலிக்க முடியாது என்று தெரிவித்து மார்ச் மாதத்துக்கு ஒத்தி வைத்துவிட்டது.


இருப்பினும், திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர்கள் தேர்வு நேற்று நடந்தது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.


 ஹால்டிக்கெட்டுகள் டிசம்பர் மாதம் வழங்கப்பட்டன. மேற்கண்ட தேர்வில் 40 ஆயிரத்து 135 பேர் பங்கேற்றனர். 1351 பேர் தேர்வுக்கு வரவில்லை. சென்னையில் 2192 பேர் இந்த தேர்வு எழுதினர். இவர்களுக்காக, ஆயிரம் விளக்கு 1, ராயப்பேட்டை1, சாந்தோம்1, சேத்துப்பட்டு1, வேப்பேரி2, புரசைவாக்கம்1 என 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

Comments

Popular posts from this blog