25 September 2013

குரூப்–1 உட்பட புதிய தேர்வுகள் எதற்கும் அறிவிப்பு இல்லை: முடங்குகிறதா டி.என்.பி.எஸ்.சி.,?

அரசுத் துறைகளில் ஏற்படும் காலியிடங்களை, உடனுக்குடன் பெற்று, தேர்வுகளை நடத்தி, வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டிய டி.என்.பி.எஸ்.சி., அமைப்பு, முடங்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள குரூப்–1 உட்பட எந்த தேர்வுகளுக்கும் அறிவிப்புகள் வெளியாகவில்லை.

29 ஆயிரம் வேலை:கடந்த ஆண்டு, துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட குரூப்–1 பதவிகளில் மட்டும், 116 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. குரூப்–4, குரூப்–2 பணியிடங்கள் உட்பட,29 ஆயிரம் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டன.ஆனால், இந்த ஆண்டு, இதுவரை, 300 வேலை வாய்ப்புகள் கூட அளிக்கப்படவில்லை என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நடவடிக்கையில் உள்ள குரூப்–4, குரூப்–2 தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளும், கடந்த ஆண்டு தேர்வு கால அட்டவணையில் அறிவிக்கப்பட்டவை.
இந்த ஆண்டு, இதுவரை, குரூப்–1 தேர்வு அறிவிக்கப்படவில்லை. அரசுத் துறைகளில், துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட குரூப்–1 பணிகள், மிகவும் முக்கியமானதாக உள்ளது.

ஆண்டுதோறும், பட்டப்படிப்பை முடித்து, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வெளியேறுகின்றனர். இவர்கள்,
குரூப்–1, குரூப்–2 தேர்வை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.ஆனால், குரூப்–1 பதவிகளுக்கான காலி பணியிடங்களை, அரசுத் துறைகளில் இருந்து கேட்டுப் பெறுவதில், டி.என்.பி.எஸ்.சி., அக்கறை காட்டவில்லை என, கூறப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள், முதல்வர் மற்றும் தலைமை செயலரை சந்தித்து, வேலை வாய்ப்புகளை அதிகம் அளிக்க வேண்டியது குறித்தோ, காலி பணியிடங்களை கேட்டுப் பெறுவது குறித்தோ விவாதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

பதவி உயர்வு:அரசுத் துறைகளில், உள்ள காலி பணியிடங்களில், 1:2 என்ற அளவில், நியமன முறை வகுக்கப்பட்டுள்ளது. அதாவது, இரு பணியிடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டால், ஒரு பணியிடம், நேரடி போட்டித் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும். இந்த நடைமுறை,தற்போது, முற்றிலும் கடைபிடிக்கப்படுவதில்லை எனவும், அனைத்து காலி பணியிடங்களையும், பதவி உயர்வு மூலமே நிரப்பிவிட்டால், படித்து வேலையற்று இருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் என்ன ஆவது என்றும், போட்டித் தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளே ஆர்வம் காட்டாததால், அரசுத் துறைகள், நமக்கென்ன என்ற மனோ நிலையில் இருக்கின்றன. குறிப்பாக, வருவாய்த் துறையில் இருந்து தான், கணிசமான
காலி பணியிடங்கள் வரும். ஆனால், இதுவரை, குரூப்–1 காலி பணியிட பட்டியலை, தேர்வாணையம் பெறவில்லை என, கூறப்படுகிறது.வழக்கமாக, தேர்வு அறிவிப்பை வெளியிட்டு, முதல்நிலை தேர்வை நடத்தி முடித்திருக்க வேண்டும். ஆண்டு முடியப்போகும் நிலையில், இதுவரை அறிவிப்பே வரவில்லை.
குரூப்–2, குரூப்–4, குரூப்–6 உட்பட எந்த தேர்வுகளுக்கும், நடப்பு ஆண்டு அறிவிப்பு இல்லை.

தேர்வு கால அட்டவணைப்படி, குரூப்–2 நிலையில், 789 பணியிடங்களுக்கு, கடந்த ஜூலை மாதம், அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். செப்., 1ம் தேதி தேர்வு நடத்தி, அக்டோபரில், தேர்வு முடிவை வெளியிட்டிருக்க வேண்டும். அக்டோபரிலேயே, நேர்முகத் தேர்வும் நடத்த வேண்டும். ஆனால், இதற்கான எந்தஅறிகுறியும் இல்லை.

நடராஜ், தலைவராக இருந்தபோது, 2013–14ம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார்.
24 வகையான தேர்வுகள் முடக்கம்:அதில், குரூப்–1, குரூப்–2 உட்பட, 24 வகையான தேர்வுகளும், அந்த தேர்வுகளுக்கான அறிவிப்பு தேதி, தேர்வு தேதி, முடிவு வெளியிடும் தேதி என, அனைத்திற்கும் கால வரையறையை நிர்ணயம் செய்திருந்தார்.

இதில், குரூப்–1 நிலையில், 25 பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மட்டும் நடக்கின்றன. மற்ற தேர்வுகளை நடத்த, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த விவகாரத்தில், முதல்வர் தலையிட்டால் மட்டுமே, தேர்வாணையம், மீண்டும் வேகம் பெறும். இல்லையெனில், ஒரு கட்டத்தில், முற்றிலும் முடங்கிவிடும் அபாயம் உள்ளதாக, துறை வட்டாரங்கள் எச்சரிக்கை மணியை அடித்துள்ளன.
தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த இயலாது: உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

எழுத்துப் பிழைகளுடன் கேள்வித்தாள் இருந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு, மறுதேர்வு நடத்த இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை பதில் தெரிவித்தது.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான போட்டித் தேர்வில், தமிழ்ப் பாடத்துக்கான பி வரிசை கேள்வித் தாளில் 47 எழுத்துப் பிழைகள் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் அளிக்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இவ்வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பிழையான 40 கேள்விகளையும் நீக்கி விடுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. அதை ஏற்க மறுத்த நீதிபதி எஸ்.நாகமுத்து, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்கள் அறிவொளி, தங்கமாரி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் கே.செல்லபாண்டியன் வாதிடுகையில், பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை விரைவில் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகிறது. மறுதேர்வு நடத்துவதால் மேலும் காலதாமதம் ஏற்படும். இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர். 40 கேள்விகள் பிழையாக இருப்பதால், அவற்றை நீக்கிவிட்டு, மொத்த மதிப்பெண் 150 என்பதற்குப் பதிலாக 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யலாம் என்று குறிப்பிட்டார்.

இதுதான் உங்களது நிலைப்பாடா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, மூன்றில் ஒரு பங்கு கேள்விகள் பிழையாக இருக்கும் நிலையில் அக் கேள்விகளையெல்லாம் நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்யலாம் என்பது ஏற்புடையதல்ல. அதேபோல, பிழையான கேள்விக்குப் பதில் அளித்தவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கலாம் என்பது, ஓரிரு கேள்விகள் தவறாக இருக்கும் தேர்வுக்குத் தான் பொருத்தமாக இருக்கும் என்றார்.இத் தேர்வைப் பொருத்தவரை ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பு இல்லாமல் நடந்திருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, பிழையான கேள்விகளுடன் நடந்த தேர்வுகள் தொடர்பான பல்வேறு வழக்குகளின் உத்தரவுகளைச் சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்குகள் அனைத்திலும் குறைந்த எண்ணிகையிலேயே பிழைகள் இடம் பெற்றிருக்கின்றன. இதன் இறுதி உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்படும். இதேபோன்ற முந்தைய வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இருப்பதும் கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...