21 June 2022

 மருத்துவத் துறையில் 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


மருத்துவத் துறையில் உள்ள 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் செப்டம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த போதமலையில் உள்ள கெடமலை கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் பங்கேற்றார். முன்னதாக, மலைக் கிராமத்திற்கு புறப்பட்ட அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்த மருத்துவர் சண்முகவடிவு பணி நேரத்தில் பணியில் இல்லாதாததும், மருத்துவர் தினகரன் அவரது மகனை அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபடுத்திய காரணத்திற்காக இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



மருத்துவத் துறையில் உள்ள 4,000 ஆயிரம் காலி பணியிடங்கள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மருத்துவத் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. அக்னிபத் திட்டம் குறித்த கேள்விக்கு ராணுவப் பணி என்பது தேசப் பணி. அதனை ஒப்பந்த அடிப்படையில் செய்வது ஏற்புடையதாக இருக்காது. எனவே இத்திட்டத்தை முதல்வர் கூறியதுபோல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

 கடினமான கணித வினாத்தாள், பாடத்திட்ட குழப்பத்தால் 10-ம் வகுப்பு தேர்ச்சி சரிவு - இதுவரை இல்லாத அளவுக்கு 5% வரை குறைந்தது





பாடத்திட்டக் குழப்பம், கடினமான கணித வினாத்தாள் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு 5 சதவீதம் வரை தேர்ச்சி குறைந்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.



தமிழகப் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 6 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 9.12 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 2019-ம் ஆண்டைவிட 5 சதவீதம் குறைவாகும். வழக்கத்தை விட தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு பாடத்திட்டக் குழப்பம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்.


இதுகுறித்து கல்வியாளர் செல்வக்குமார் கூறியதாவது:


10-ம் வகுப்பு தேர்ச்சி சரிவதற்கு அரசுப் பள்ளிகளின் பின்னடைவு முக்கிய காரணம். ஏனெனில், 10-ம் வகுப்பு தேர்வெழுதிய 9.12 லட்சம் மாணவர்களில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 90,626 பேர் தோல்வி அடைந்துள்ளனர். அதில் அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டும் 57,437 (63%) பேர். ஒட்டுமொத்தமாக அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி 85.25 சதவீதமாக உள்ளது. 2019-ம் ஆண்டைவிட 7 சதவீதம் குறைவு.


அதேநேரம் தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு 98.31% தேர்ச்சி பெற்றுள்ளன. இது முன்பைவிட 0.7 சதவீதம் மட்டுமே குறைவாகும். அரசுப் பள்ளிகள், மாணவர்களை தேர்வுக்கு முறையாக தயார் செய்யாததால் தேர்ச்சி சரிந்துள்ளது. விடைத்தாள் திருத்துதலில் கடுமை இல்லாததால்தான் இந்தளவு தேர்ச்சிகூட வந்துள்ளது. எனவே, அரசு, அரசு உதவிப் பள்ளிகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து துணைத் தேர்வில் பங்கேற்க வழிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


அரசுப் பள்ளி கணித ஆசிரியர்கள் இதுதொடர்பாக கூறியதாவது:


அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை 2 ஆண்டு கரோனா விடுமுறை காலம் பெரும் சிக்கலாக மாறிவிட்டது. 8-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 9-ம் வகுப்பு பாடத்தை படிக்காமலேயே நேரடியாக 10-ம் வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்பட்டனர். ஏற்கெனவே 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி வழங்கப்படுவதால் 40 சதவீத மாணவர்கள் அடிப்படை கற்றல் நிலையிலேயே இருப்பார்கள். 9-ம் வகுப்பில்தான் படிப்படியாக பயிற்சி அளித்து பொதுத்தேர்வுக்கு அவர்களை தயார் செய்வோம்.


ஆனால், நடப்பாண்டு அந்த சூழல் இல்லாததால் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதில் சிரமங்கள் இருந்தன. இதுதவிர குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்து இறுதிவரை தெளிவின்மையே நிலவியது. இதனால் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கடைசி பருவப்பாடங்கள் கடைசி வாரங்களில்தான் நடத்தி முடிக்கப்பட்டன. அதேநேரம் பொதுத்தேர்வில் இறுதி பருவப் பாடத்தில் இருந்து 20 முதல் 30 சதவீதம் வரையான கேள்விகள் இடம்பெற்றன.


குறிப்பாக கணித வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்தது. நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு நுண்ணறிவு அடிப்படையில் பெரும்பாலான கேள்விகள் இடம்பெற்றதால் மாணவர்கள் சிரமப்பட்டனர். இதனால் விடைக்குறிப்பை எளிமையாக வடிவமைக்க வேண்டுகோள் விடுத்தும் தேர்வுத்துறை மறுத்துவிட்டது. அதன் தாக்கமாக கணிதத்தில் மட்டும் 82 ஆயிரம் பேர் வரை தோல்வி அடைந்துள்ளனர். எனவே, சிபிஎஸ்இ போல் வினாத்தாள் வடிவமைப்பில் குறிப்பிட்ட அளவே கடினத் தன்மையைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


ஓய்வுபெற்ற ஆசிரியர் கு.பால்ராஜ் கூறும்போது, ''10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 8.21 லட்சம் மாணவர்களில் சுமார் 5.8 லட்சம் பேர் 350-க்கும் கீழ்தான் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் பிளஸ் 1 வகுப்பில் கலை, தொழிற்பிரிவு பாடங்கள் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்குத் தான் முக்கியத்துவம் தருவார்கள். அறிவியல் பிரிவைத் தேர்வை செய்பவர்கள் எண்ணிக்கை குறையக்கூடும்.


மேல்நிலை வகுப்புகளில் கடின பாடத்திட்டமும் ஒரு அச்சுறுத்தலாக மாணவர்களுக்கு தென்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு கணிதப் பாடத்துக்கும் செய்முறைத் தேர்வை கொண்டுவர முன்வர வேண்டும்'' என்றார்.

 ரூ.1.43 கோடி செலவழித்து 'மொக்கை' பயிற்சி; பள்ளிக்கல்வி துறை மீது ஆசிரியர்கள் அதிருப்தி





சென்னை----அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி என்ற பெயரில், 1.43 கோடி ரூபாய் செலவில், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட, 'யு டியூப்' வீடியோ நிகழ்ச்சியால், ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.


தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டாகவே, பள்ளிக்கல்வித் துறை பல்வேறு சர்ச்சைகளுடன் நகர்ந்து வருகிறது.மாணவர்களிடையே ஜாதி பிரச்னை, பாலியல் பிரச்னை, மது குடித்து தகராறு, ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, போராட்டம், ஆர்ப்பாட்டம், வகுப்பு, பணி புறக்கணிப்பு தினசரி நிகழ்வாக உள்ளது.புதிய கல்வி ஆண்டிலாவது இந்த நிலைமை மாறும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர்.


அதற்கு மாறாக துறையின் செயல்பாடுகள் நடந்து வருகின்றன.கடந்த, 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பின், முதல் சனிக்கிழமையான நேற்று முன்தினம், மாநிலம் முழுதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க அமைக்கப்பட்ட கணினி அறைகளில், ஆசிரியர்கள் கூட்டமாக அமர வைக்கப்பட்டனர்.


காலை, 10:00 மணிக்கு, 'புரஜக்டர்' வழியே அங்கிருந்த திரைகளில், யு டியூப்பில் நேரடி ஒளிபரப்பு வீடியோ காட்டப்பட்டது. அதில், பள்ளிக்கல்வி துறை ஊழியர் ஒருவர் பேச துவங்கினார்; அவர் பேசிக் கொண்டே இருந்ததால், நண்பகல் தாண்டி விட்டது.அவர் பேசியது எதுவும் புரியாமல் சோர்வடைந்த ஆசிரியர்கள், இடைவேளைக்கு பின் மீண்டும் இருக்கையில் அமர்ந்தனர்.


 பின், மீண்டும் இருவர் பேசினர். ஆசிரியர்கள் அதையும் களைப்புடன் பார்த்தனர்.மாலை, 4:30 மணிக்கு பயிற்சி முடிந்தது என கூறியதும், நிகழ்ச்சி குறித்த கருத்தை, செயல்படாத செயலி ஒன்றில் பதிவு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


 கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000; தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற உத்தரவு




அரசுப்பள்ளிகளில் படித்து, தற்போது கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுதொடர்பாக அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும், உயர்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.



அதில், மாணவிகளின் கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்தமைக்கான சான்று உள்ளிட்டவற்றுடன் வங்கிக்கணக்கு விவரம் ஆகியவற்றை பெற ஆணையிடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற வேண்டும் என்றும் சமூகநலத்துறையின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பதால், சான்றிதழ்களை பெறும் பணியை விரைந்து செயல்படுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது.


சான்றிதழ்களை பெற்ற உடன், அவற்றை சரிபார்க்கும் பணி தொடங்கும். கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக்கப்படும் ஜூலை 15-ம் தேதி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க ஏதுவாக, இப்பணிகளை உயர்கல்வித்துறை தொடங்கியுள்ளது.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...