21 November 2022

 'சம்பள உயர்வு, பணிநிரந்தரம் வேண்டும்..' - முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை



தமிழகப் பள்ளிகளில் ரூ. 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய சிறப்பாசிரியர் பாடங்களில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதிநேர ஆசிரியர்களாக 12,327 பேர் பணியாற்றி வருகிறார்கள்.


அவர்கள் தங்களை, தி.மு.க தேர்தல் வாக்குறுதி 181ல் கூறியபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.


இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது, "எங்களுக்கு முன்பு உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், கணினி பாடங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தவர்கள் நிரந்தரம் செய்யப்பட்டு சிறப்பாசிரியர்களாகப் பணியாற்றி வருகிறார்கள்.



16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை அதே உடற்கல்வி, இசை, ஓவியம் உள்ளிட்ட பாடங்களில் "சர்வ சிக்சா அபியான்" என்ற மத்திய அரசு திட்டத்தில் தமிழ்நாடு அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு ரூ 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தியது. அந்த திட்டமானது தற்போது "சமக்ர சிக்சா" எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு விட்டது.


இந்தத் திட்டத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் செய்கின்ற பணியும், நிரந்தரப்பணியில் உள்ள சிறப்பாசிரியர்கள் செய்யும் பணியும் ஒன்று தான். 



இப்போது 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நாங்கள் ரூபாய் 10 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறோம். இதற்காக ஒரு ஆண்டுக்கு 140 கோடி செலவாகிறது. இதை இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கினால் புதிதாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஆரம்ப ஊதியத்தில் இந்த 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாகப் பணியமர்த்த முடியும். கல்வி மேம்பாட்டிற்காக இதை ஒரு செலவாகக் கருதக்கூடாது.


12 ஆயிரம் குடும்பம் வாழ தமிழக முதல்வர் ரூ. 300 கோடி நிதியை கூடுதலாக ஒதுக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அமைச்சரவையில் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதற்கான முடிவு எடுக்க வேண்டும்.


இதை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மழை வெள்ள பாதிப்பைப் பார்வையிட சிதம்பரம், திருவெண்காடு பூந்தோட்டம் வந்தபோது கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர், முதல்வர் செயலாளர், கல்வித்துறை அதிகாரிகள் அனைவரிடமும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதனைப் பரிசீலித்து பணிநிரந்தரம் செய்து 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டும்.' என்றார்.


மேலும், அவர் கூறுகையில், 'சமக்ர சிக்சா (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாளர்களைப் போலவே பகுதிநேர ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறோம். இதில் பணியாளர்களுக்கு மட்டுமே 15 சதவீதம் சம்பளம் உயர்த்தி இந்த நவம்பர் மாதம் முதல் வழங்க எஸ்பிடி மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


ஆனால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு வழங்க இதுவரை உத்தரவு பிறப்பிக்கவில்லை. இந்த ஊதிய உயர்வை உடனே பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். ஜாக்டோ ஜியோ மாநாட்டில் செப்டம்பர் 10ம் தேதி முதல்வர் அறிவித்த பணிமாறுதலை உடனே வழங்க வேண்டும்." என்றும் கூறினார்.

 புதுவை வேளாண்துறையில் 33 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்




வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் 33 காலிப் பணியிடங்களுக்கு திங்கள்கிழமை (நவ. 21) முதல் விண்ணப்பிக்கலாம். புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் 33 காலிப் பணியிடங்களுக்கு திங்கள்கிழமை (நவ. 21) முதல் விண்ணப்பிக்கலாம்.


இதுகுறித்து புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் வேளாண் அலுவலா்களுக்கான 33 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துறையில் நேரடி நியமனம் மூலம் காலியாக உள்ள 23 வேளாண் அலுவலா்கள், 5 வேளாண் அலுவலா் (பொறியியல்) மற்றும் 5 வேளாண் அலுவலா் (நிலவியல்) ஆகிய 33 காலிப் பணியிடங்களுக்கு புதுச்சேரியைப் பூா்வீகமாகக் கொண்ட மற்றும் வசிக்கும் தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தகுதியானோரின் விண்ணப்பங்களை 21- ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் டிசம்பா் 20-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை புதுவை அரசு இணையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விரிவான விவரங்களுக்கு 0413-2233246 என்ற உதவி தொலைபேசி எண்ணில் வேலை நாள்களில் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரையில் தொடா்புகொண்டு தகவல் பெறலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 தமிழ் பேராசிரியர்கள் இன்ஜி., கல்லுாரியில் நியமனம்?



இன்ஜினியரிங் படிப்பில், கட்டாய தமிழ் பாடம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், தமிழ் பாடம் நடத்தும் உதவி பேராசிரியர்களை நியமிக்க, இன்ஜினியரிங் கல்லுாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளன.


தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகள் நடத்தப்படுகின்றன.அண்ணா பல்கலை, ஏற்கனவே அமல்படுத்திய பாடத் திட்டத்தில், இன்ஜினியரிங் தொடர்பான தொழில்நுட்ப பாடங்கள் மட்டும் இடம் பெற்றன; மொழி பாடங்கள் இடம் பெறவில்லை.


இந்நிலையில், இந்த ஆண்டில் இருந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, புதிய பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்த பாடத் திட்டத்தின்படி, முதலாம், இரண்டாம் செமஸ்டர் தேர்வு மாணவர்களுக்கு, தமிழ், தமிழர் பண்பாடு, நாகரிகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் தமிழ் ஆகிய இரண்டு பாடங்கள் கட்டாய பாடமாகி உள்ளன. 


இதைத் தொடர்ந்து, இந்த பாடங்களை நடத்துவதற்கு, தமிழ் பாடத்தில் யு.ஜி.சி., தகுதி பெற்ற உதவி பேராசிரியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


இதன்படி, அண்ணா பல்கலை மற்றும் பிற இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தமிழ் பாடத்தில் ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்களை, தமிழ் உதவி பேராசிரியர்களாக நியமிக்க, ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. இதற்கான முறையான உத்தரவு, விரைவில் வெளியாகும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் 20,000 ஆவண எழுத்தர்கள் நியமனம்: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்



தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் 20,000 ஆவண எழுத்தர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.


நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெறுவதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளையொட்டி, வரும் 27ம் தேதி முதல் மதுரை வடக்கு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது குறித்து வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், திருப்பாலையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.


வணிக வரி பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: தலையாரி, சத்துணவு பணியாளர்கள், ரேஷன் கடையில் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதற்கான பட்டியலை பாகுபாடு, வேறுபாடு பார்க்காமல் தயாரிக்கப்பட இருக்கிறது. அதுபோல தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் 20,000 ஆவண எழுத்தர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நியமிக்கப்பட இருக்கின்றனர். சென்ற 10 ஆண்டுகளாக போராட்டங்களை கடந்து வெற்றி பெற்று இருக்கிறோம். 


வாக்காளர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளில் பூத் கமிட்டியினர் சிறப்பாக செயல்பட வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதுடன் திமுகவையும் கட்டி காத்து வருகிறார். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 27ம் தேதி முதல் மதுரையில் வடக்கு, மாநகர், தெற்கு மாவட்டங்கள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 


அவரது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடத்த 11 பேர் கொண்ட அணியாக 400 குழுக்களை தேர்வு செய்ய வேண்டும்இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சோமசுந்தரபாண்டியன், மாவட்ட துணை செயலாளர்கள் ரோகிணி, வெங்கடேசன் எம்எல்ஏ, இளைஞர் அணி ஜிபி.ராஜா, பகுதி செயலாளர்கள் சசிக்குமார், மருதுபாண்டியன், மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன், வக்கீல் கலாநிதி உள்பட பலர் பங்கேற்றனர்.

  முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 1,996 காலியிடங்களுக்கு 2.36 லட்சம் பேர் போட்டி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 1996 காலியிடங்களுக்கு ...