21 April 2022

 போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்த ஆயிரம் பேர்- அதிர்ச்சியில் தமிழ்நாடு தேர்வுத்துறை




தமிழ்நாடு தேர்வுத்துறை போல் அச்சிடப்பட்ட போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து, அஞ்சல் துறை உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் பணியில் சேர்ந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.



ஒன்றிய அரசின் அஞ்சல் துறை, எண்ணெய் நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் எழுத்துத்தேர்வு இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும் தேர்வுகளுக்கு, வடமாநிலத்தைச்சேர்ந்தவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி பணியில் சேர்ந்துள்ளனர். பணியில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டபோது தொடர்ந்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.


போலி மதிப்பெண் சான்றிதழ்களில் முதன்மை மொழியாக இந்தி பெரும்பாலும் அச்சிடப்பட்டுள்ளது. மேலும், சான்றிதழில் கையொப்பமிட்ட அலுவலர்கள் இந்தியிலும் கையெழுத்திட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் அலுவலர்களின் கையொப்பம் தமிழ் மொழியில் மட்டுமே இடம்பெறும் ‌என்பது குறிப்பிடத்தக்கது.


உத்தரப்பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் பணியில் சேர்ந்தவர்களில் 500-க்கும் மேற்பட்டோர் போலி தமிழ்நாடு மதிப்பெண் சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர் என அரசுத்தேர்வுகள் துறை கண்டுபிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


இதுவரை 2ஆயிரத்து 500 மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில் ஆயிரத்திற்கும் மேல் போலி எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஏற்கெனவே 300க்கும் மேற்பட்டோர் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்து தமிழ்நாடு அஞ்சல் அலுவலகங்களில் சேர்ந்து பணிபுரிந்து வருவதாகத் தெரிகிறது.


பெரும்பாலான மதிப்பெண் சான்றிதழ்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த மதிப்பெண் சான்றிதழ்கள் எழுத்துத்தேர்வு இன்றி மதிப்பெண் அடிப்படையில் அஞ்சல் அலுவலகங்களில் தேர்வு செய்யப்படும் பணிகளுக்காக போலியாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.



கர்நாடகாவில் தமிழ்நாடு போலி மதிப்பெண் சான்றிதழ்களை அளித்து பணியில் சேர்ந்த இருவர் கைது செய்து, அம்மாநில காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எந்த பாடத்திட்டம்?: தெளிவுபடுத்த தேர்வர்கள் கோரிக்கை



டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் எந்த பாடத்திட்டத்தில் நடைபெறுமென தெளிவுபடுத்த வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட 12 ஆயிரத்து 800 காலியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்த தேர்வை எதிர்கொள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால், தேர்வு புதிய பாடத்திட்டத்தின்படி நடக்குமா? அல்லது பழைய பாடத்திட்டத்தின்படி நடைபெறுமா? என்ற குழப்பம் போட்டி தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறுகையில், 'ஆசிரியர் தேர்வு வாரியம் டெட் தேர்வு புதிய பாடத்திட்டத்தின்படியே நடத்தப்படுமென அறிவித்துள்ளது. ஆனால் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பள்ளி பாடப்புத்தகங்களை கொண்டு தயாராவதால் இந்த குழப்பம் ஏற்படுகிறது. தேர்வின் வினாக்கள் 90 சதவீதம் பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து இடம்பெறுவதால் புதிய பாடத்திட்டமா? அல்லது பழைய பாடத்திட்டமா? என தேர்வர்கள் குழம்புகின்றனர். எனவே டிஎன்பிஎஸ்சியும் தேர்வர்களின் குழப்பத்தை தீர்க்க முன்வர வேண்டும்' என்றார்.

 கூட்டுறவு உதவி இயக்குநர் பணிக்கு ஏப்ரல் 30-ல் தேர்வு: டிஎன்பிஎஸ்சி




கூட்டுறவு தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர் பணிக்கு பணிக்கு ஏப்ரல் 30-ல் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள 8 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது.


அதற்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 30-ல் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...