20 December 2014

ஆண்டு தோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனதில் வைத்து ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த சித்ரா, திண்டிவனம் எம்.டி.கிரேனே நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜி.நாகராஜன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில், ஏப்ரல் 2013-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒரே ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு மட்டும்தான் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவை ஏராளமாக உள்ளன. அதனால், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி, முடிந்த அளவு அதிகமான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினர்.

இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தமான் முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும்தான் நியமனம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது.

மனுதாரர்கள் இருவரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்பு பணியமர்த்தப்பட்ட மனுதாரர்கள் அடங்கிய பிரிவு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணியில் தொடரவும், அதற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவும் கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆசிரியர்கள் அனைவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கற்றுக் கொடுப்பதற்கு முழுத் தகுதி உடையவர்கள். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவில்லை.

இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே தாற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்குள், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். இல்லையெனில், அவர்கள் தானாகவே பணியிலிருந்து வெளியேற வேண்டுயதுதான். எனவே, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனிதில் வைத்துக் கொண்டு, ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.


அரசுப் போக்குவரத்துக் கழக பணி நியமனம்: நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பணி நியமனங்கள் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே நடைபெறக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.

கோவைப் போக்குவரத்துக் கழகம் கடந்த மாதம் 2-ஆம் தேதி ஓட்டுநர், நடத்துநர், இளநிலை பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவது தொடர்பாகவும், பணியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கக் கோரியும் விளம்பரம் வெளியிட்டிருந்தது. இதன்படி, கோவையைச் சேர்ந்த முஜிபூர் ரஹ்மான் இளநிலை பொறியாளர் பணிக்காக விண்ணப்பித்தார். வருகிற 22-ஆம் தேதி நேர்காணலில் பங்கேற்குமாறு இவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, நேர்காணலில் பங்கேற்பதற்கான வயது வரம்பை தளர்த்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நிர்வாகம், தொழில்நுட்பம் போன்ற எந்தத் துறையாக இருந்தாலும் நேர்முகத் தேர்வு மூலம் மட்டும் பணி நியமனம் செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்குப் பிறகே கோவை போக்குவரத்துக் கழகம் பணி நியமனம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இது சட்ட விரோதமானது. பணி நியமனம் தொடர்பாக இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்களைத் தவிர, இனிமேல் நியமனம் செய்யப்படும் அனைத்து பணிகளும் நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நடைபெறக் கூடாது என கடந்த முறை உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுப்படியே பணி நியமனம் நடைபெற வேண்டும். எந்தவொரு அரசுப் பணியும் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே நிரப்பக் கூடாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

கோவைப் போக்குவரத்துக் கழகம் கடந்த மாதம் வெளியிட்ட விளம்பரத்தின்படி நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே பணி நியமனம் செய்யக் கூடாது. இந்த வழக்கின் உத்தரவையும், கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின் நகலையும் போக்குவரத்துக் கழகச் செயலாளர், தமிழக அரசு ஆகியோருக்கு உயர் நீதிமன்ற பதிவுத் துறை அனுப்ப வேண்டும். உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படியே பணி நியமனங்கள் நடைபெற வேண்டும் என அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும், அதன் செயலாளர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.


  ஒரே நாளில் 1,231 நர்ஸ்கள் பணி நியமனம்.. மேலும், 2417 காலி பணியிடம் நிரப்பப்படும் - முதல்வர் ஸ்டாலின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம்...