நீட் தேர்வு முடிவுகள்.. தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட் ஆஃப் குறித்து வெளியான முக்கிய தகவல்
எம்.பி.பி.எஸ் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் செபடம்பர் 7 ஆம் தேதி நேற்று வெளியானது. இன்று அதிகாலை மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது.
இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 51.28 % ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 54% ஆக இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், மொத்தம் 1.32 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 67,789 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் எப்படி இருக்கும் என்று மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தனது 'கரியர் கய்டன்ஸ்' என்ற யூடியூப் சேனலில் நீட் தேர்வு முடிவுகள் மற்றும் இந்த ஆண்டு தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் மதிப்பெண் எப்படி இருக்கும் என்பது சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அதில் அவர் கடந்த ஆண்டு பொதுப்பிரிவினருக்கான எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் மதிப்பெண் 138 மதிப்பெண்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண் 117 ஆகவும் எஸ்சி. எஸ்டி, ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் மதிப்பெண் 108 மதிப்பெண் இருந்த நிலையில், இந்த ஆண்டு 93 மதிப்பெண் ஆகவும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வில், 54.8 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 51.28 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டை விட 6% குறைந்துள்ளது. அதே நேரத்தில், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டைவிட 8,865 மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.