17 January 2022

 பள்ளிகளை மூட வேண்டாம் உலக வங்கி வலியுறுத்தல்


'கொரோனா பரவல் இருந்தாலும், அதற்காக பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இப்போது இல்லை,'' என, உலக வங்கியின் கல்வி இயக்குனர் ஜெய்மீ சாவேத்ரா கூறினார்.



கடைசி முயற்சிஉலக வங்கியின் சர்வதேச கல்வி இயக்குனர் ஜெய்மீ சாவேத்ரா கூறியதாவது:உலகம் முழுதும் தற்போது கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதற்காக பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இப்போது இல்லை; அது, கடைசி முயற்சியாகத்தான் இருக்க வேண்டும். பள்ளிகளில் தொற்று பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 




உணவகங்கள், மதுக்கூடங்கள் மற்றும் வணிக வளாகங்களை திறக்க அனுமதித்து விட்டு, பள்ளிகளை மட்டும் மூடுவது நியாயமல்ல. கடந்த 2020ல் கொரோனா பரவிய போது நம்மிடம் அதுகுறித்த புரிதல் இல்லை. அதனால் பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களை மூடினோம். வலியுறுத்தல்இப்போது நிலைமை அப்படி இல்லை. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும் என எந்த நாடுமே வலியுறுத்தவில்லை.பள்ளிகள் மூடப்படுவதால் இந்தியாவில் கற்றல் வறுமை 50 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 தமிழகத்தில் 31-ம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுமா?.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு


கொரோனா அதிகரித்து வருவதால் மனதளவில் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.


தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டு வருவதால் முதலில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வருகிற 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.



பள்ளிகளுக்கு விடுமுறை


இதன்பிறகு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வருகிற 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகள் விடுமுறை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.


31-ம் தேதிக்கு பிறகு என்ன முடிவு?


விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ' ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருந்தாலும், மனதளவில் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் விடுமுறை விடப்பட்டுள்ளது. 31-ம் தேதிக்கு பிறகு சூழ்நிலை எப்படி உள்ளது? என்பது குறித்து ஆய்வு செய்து அதன் பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும்' என்று கூறினார்.


இதுபோன்று இனியும் நடக்கக்கூடாது

 


சமீபத்தில் நடந்த நிகழ்வு போன்று இனியும் தமிழகத்தில் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் கூடுதல் கட்டடங்கள் தரமாக கட்டப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார் இதனைத் தொடர்ந்துதான் தமிழகம் முழுவதும் 3030 பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு உள்ளது பள்ளிக் கட்டிடத்தின் முக்கியம் எவ்வளவு தூரம் உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்று அவர் தெரிவித்தார்.


இல்லம் தேடி கல்வித் திட்டம்

 


கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் நோக்கமாக உள்ளது இதற்காக தான் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை மட்டும்தான் மக்களால் உற்று நோக்கப்படுகிறது என்று கூறினார்.


ஆசிரியர்கள் கண்டிப்பதை தவறாக எண்ணக்கூடாது

 


பொதுத்தேர்வு என்பது மிக மிக முக்கியமான தேர்வு. அதனை கவனத்தில் கொண்டு மாணவ மாணவிகள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கிய அவர் மாணவ மாணவிகள் எந்தெந்த கல்லூரிகளில் சேர வேண்டும் என்று கவனமாக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்றும் பெருமிதத்துடன் கூறினார், ''ஆசிரியர்கள்தான் உங்களுடைய இரண்டாவது பெற்றோர். ஆசிரியர்கள் கண்டிப்பதை மாணவ-மாணவிகள் தவறாக எண்ணக்கூடாது உங்கள் மேல் உள்ள அக்கறையால் தான் ஆசிரியர்கள் உங்களை கண்டிக்கின்றனர். எனவே ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என்றும் பேசினார்.

 அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி கமிஷனரகம்


அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும்' என, பள்ளி கல்வி கமிஷனரகம் அறிவுறுத்தி உள்ளது.


பள்ளி கல்வித்துறை பணிகள் குறித்து, விழுப்புரத்தில் மண்டல ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் தலைமையிலான அதிகாரிகள், விழுப்புரம் மண்டலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடத்திய ஆய்வின் முடிவுகளை சமர்ப்பித்தனர். இந்த ஆய்வறிக்கை அடிப்படையில், கமிஷனர் தரப்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.அதன் விபரம்:ஆசிரியர்களின் பாடக்குறிப்பேடு சரியாக மேற்கொள்ளப்படவில்லை.


வகுப்பறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை. சில ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தவே தெரியவில்லை. ஆங்கில ஆசிரியர்கள் தமிழில் பேசி பாடம் நடத்துகின்றனர். ஆங்கில பாடம் எடுப்பவர்கள், தமிழில் பேசுவது எப்படி பொருத்தமாக இருக்கும்.


இதை மாற்றி, அவர்கள் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்க வேண்டும்.பள்ளிகளின் கண்காணிப்பு பதிவேடு சரியாக பராமரிக்கப்பட வேண்டும். பதிவேடுகளில் போலியான, தவறான தகவல்கள் இடம் பெறக்கூடாது. தலைமை ஆசிரியருக்கு, மாணவர்களுக்கான பாடங்களை பற்றிய புரிதல் இருக்க வேண்டும். பாடக்குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது, தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் சுற்றி வந்து, வகுப்பறை செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.வகுப்பறைகளில் மாணவர் வழிபாட்டு கூட்டம் நடத்த வேண்டும். கட்டுரை, பாட நோட்டுகள் ஆகியவற்றை உரிய நேரத்தில் ஆசிரியர்கள் திருத்தி, மாணவர்களுக்கு பிழைகளை விளக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவை கட்டாயம் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது, பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, விரைந்து சரிசெய்ய வேண்டும். வீட்டு பாடங்களை மாணவர்களுக்கு வழங்கி அவற்றை திருத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வு செய்கிறது தமிழக காவல் துறை; விரைவில் அறிவிப்பு வெளியாகிறது: தகுதியுள்ள இளைஞர்கள் தயாராகுமாறு அதிகாரிகள் அறிவுரை


தமிழக காவல் துறையில் 10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வு செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


எனவே, தகுதியுள்ள இளைஞர்கள் கரோனா காலத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, காவலர் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், மக்களின் உயிர், உடமைக்கு பாதுகாப்பு அளித்தல் உட்பட பல்வேறு பணிகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழி குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றச் செயல்களை தடுக்கவும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


தமிழக காவல் துறையில் காவலர் பற்றாக்குறையும், இதனால் கூடுதல் பணிச்சுமையும் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த 2021 ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி தமிழககாவல் துறைக்கு 1 லட்சத்து 33,198போலீஸார் அரசால் ஒப்பளிக்கப்பட்டது. ஆனால், 1 லட்சத்து 18,881பேர் மட்டுமே பணியில் இருந்தனர்.


இதற்கிடையில், காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


அதன்படி, முதல் கட்டமாக 11,813 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு 2020 செப்.17-ம் தேதி வெளியிடப்பட்டது.


இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு அதே ஆண்டு டிச.13-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.


8 மாத பயிற்சி


அனைத்து தேர்விலும் வெற்றி பெற்ற 10,391 பேருக்கு அடுத்த மாதம் முதல் 8 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடிந்த பிறகு, தமிழக காவல் துறையில் முறைப்படி அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.


இதேபோல, 969 காவல் உதவிஆய்வாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வையும் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தியது.


இந்நிலையில், தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு படை வீரர்கள் என சுமார்10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வுசெய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


சுமார் 450 காவல் உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


எனவே, வேலை தேடும் இளைஞர்கள், ஆர்வம் உள்ள தகுதிவாய்ந்த பட்டதாரிகள் கரோனாஊரடங்கு காலத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, காவலர் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

 புதுச்சேரி மாநிலத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு? ... பள்ளிக்கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசனை


புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, பள்ளிகளுக்கு கடந்த 10ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.அவ்வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது.தற்போது பத்தாம் வகுப்பு , பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் மட்டும் வாரத்திற்கு ஆறு நாட்கள் இயங்கி வருகின்றன.பத்தாம் வகுப்பிற்கு வரும் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும், பிளஸ் 2 வகுப்பிற்கு 19ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலும் திருப்புதல் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருந்தது.இந்நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகளுக்கு ஜன., 31ம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.மேலும், ஜன., 19ம் தேதி தொடங்க இருந்த 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது.தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுக்கு தமிழக அரசின் கேள்வித்தாள்களை பயன்படுத்த, புதுச்சேரி பள்ளி கல்வித் துறை திட்டமிட்டு இருந்தது.ஆனால், தமிழகத்தில் திருப்புதல் தேர்வு ஒத்தி வைக்கப் பட்டுள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில் திருப்புதல் தேர்வுகள் நடத்தினால், தமிழக மாணவர்களுக்கு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகும் வாய்ப்பு உள்ளது.வழக்கமாக, புதுச்சேரியில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொது தேர்வினை தவிர்த்து, காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் உள்ளிட்ட என மற்ற தேர்வுகளுக்கு புதுச்சேரி பள்ளி கல்வித் துறை தான் வினாத்தாள்களை தயாரித்து வழங்கும்.முதல் முறையாக, தமிழக அரசின் வினாத் தாள்களை திருப்புதல் தேர்விற்கு பயன்படுத்த அணுகி இருந்தது.புதுச்சேரியில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால், திருப்புதல் தேர்வினை கொண்டே இறுதி மதிப்பீடு செய்து விடலாம் என, கல்வித் துறை அதிகாரிகள் கணக்கு போட்டனர்.ஆனால், தமிழக அரசு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வை தள்ளி வைத்ததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை வினாத்தாள் தயாரித்து திருப்புதல் தேர்வினை தனியாக நடத்தலாம்.



ஆனால் இரு நாட்களில் வினாத்தாள் தயாரித்து, தேர்வை நடத்த வாய்ப்பில்லை.இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை இன்று ஆலோசித்து, முடிவு எடுக்க உள்ளது.தமிழகத்தை பின்பற்றி, 10ம் வகுப்பு , பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் தள்ளிப் போகவே வாய்ப்புள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வினை 16,600 மாணவ மாணவிகளும், பிளஸ் 2 திருப்புதல் தேர்வினை 14,200 மாணவ மாணவிகளும் எதிர்நோக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.இன்று ஆலோசனைபள்ளி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு கூறியதாவது:தமிழகத்தில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு ஜன., 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதேபோன்று, புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்வர், பள்ளி கல்வித் துறை அமைச்சர் ஆகியோரிடம் ஆலோசித்து இன்று 17ம் தேதி முடிவு அறிவிக்கப்படும்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு சம்பந்தமாகவும் இன்று முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு 


 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...