27 February 2023

 குரூப்-2 தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் தகுதி இழப்பு?





நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 பிரதான தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தகுதி இழப்பு செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழக அரசு துறைகளில், 'குரூப் 2, 2 ஏ' பணிகளில் காலியாக உள்ள, 5,446 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியே கடந்த ஆண்டு மே, 21ல் முதல் நிலை தகுதி தேர்வு நடந்தது. 


இதில் தேர்ச்சி பெற்ற 55 ஆயிரம் பேருக்கு, குரூப் - 2 பிரதான தேர்வு நேற்று முன்தினம் (பிப்.,25) நடத்தப்பட்டது. அன்று காலையில் நடக்கவிருந்த தமிழ் தகுதித்தாள் தேர்வுக்கு, பல தேர்வு மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வுக்கான விடைத்தாள்கள் வர தாமதமானது. இதனால், காலை, 9:30 மணிக்கு திட்டமிட்டபடி தேர்வை துவக்க முடியவில்லை.


தாமதமாக தேர்வை நடத்த துவங்கினாலும், பல இடங்களில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படம் மற்றும் பதிவெண்ணுடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டன. அதனால், தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். பல தேர்வர்கள் தங்கள் பதிவெண்களை பார்க்காமல், மாறியிருந்த விடைத்தாளில் விடைகளை வேகமாக குறிப்பிட்டதால் அச்சம் அடைந்தனர்.


பின், தேர்வு மையங்களில் இருந்து, டி.என்.பி.எஸ்.சி.,க்கு தகவல் அளிக்கப்பட்டு, விடைத்தாள்களை சரியாக வழங்கவும், விடைத்தாள் மாறியோருக்கு, மாற்றாக வெற்று விடைத்தாள்கள் வழங்கியும், தேர்வு நடத்தப்பட்டது. 


மேலும் புத்தகங்கள் மற்றும் செல்போன்களை பார்த்து பட்டதாரிகள் குரூப் 2 தேர்வெழுதியதாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து, டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையின் முடிவில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தகுதி இழப்பு செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 TNPSC Group 2: குரூப்-2 குளறுபடி; டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அவசர ஆலோசனை!




குரூப்-2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக, சென்னையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(TNPSC) அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.


தமிழ்நாடு முழுவதும் கடந்த 25ம் தேதி குரூப்-2 முதன்மை தேர்வு நடைபெற்றது. காலையில் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வும், பிற்பகலில் பொதுத் தேர்வும் நடத்தப்பட்டது. இதில் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வில் குளறுபடி இருந்தது தெரியவந்தது. ஒருசில தேர்வு மையங்களில் வினாத்தாள்களில் பதிவெண்கள் மாறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து வினாத்தாள்கள் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. காலதாமதாக தேர்வு தொடங்கியதால், கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இதற்கிடையே சில மையங்களில் வினாக்களை பார்த்த தேர்வர்கள், விடைகளை செல்போன் மற்றும் புத்தகங்களைப் பார்த்து எழுதியதாகப் புகார் எழுந்தது. 


இதனால் தேர்வை ரத்து செய்துவிட்டு, மாற்றுத் தேதியில் தேர்வு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்.27) டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ், உறுப்பினர் செயலாளர் உமா மகேஸ்வரி, தேர்வாணையை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 


கூட்டத்தில் குரூப் 2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. வருங்காலங்களில் பிரச்சினைகளின்றி தேர்வு நடத்துவது, முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 


தேர்வுக்கான விடைத்தாள், வினாத்தாள்களைச் சரியாக அனுப்பாத அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...