25 February 2022

 ஆசிரியர் தேர்வு வாரியத்தைக் கண்டித்து முதுகலை ஆசிரியர்கள் போராட்டம்




முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு நடைபெற்ற போட்டி எழுத்துத் தேர்வில் தங்களைக் கேட்காமல் ஆசிரியர் தேர்வு வாரியம் பணி நியமனம் செய்தது.


இனிமேல் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்குத் தங்களையும் கலந்தாலோசித்துப் பணி இடங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதுகலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.


சென்னை பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அலுவலகம் முன்பு முதுகலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் இன்று (பிப்ரவரி 25) போராட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் பொருளாளர் பிரபுதாஸ், "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பார்வையாளர்களும் கணினி ஆசிரியர்களைத் தொழில்நுட்ப உதவியாளராகவும் பல்வேறு இடங்களுக்குப் பணி நியமனம் செய்தனர்.


அதிக தூரம் பணி நியமனம் செய்யப்பட்டதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டோம். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முறையான பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படவில்லை. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளைப் பார்க்காமல் தவித்துவருகிறார்.


மேலும் ஆசிரியர்களுக்கு பஞ்சப்படி, உழைப்பு ஊதியம் முயற்சி வழங்காமல் உள்ளனர். எனவே இதுபோன்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாட்டைக் கடுமையாகக் கண்டிக்கிறோம் எனத் தெரிவித்தார்.

 நிரந்தரப் பதிவு கணக்குடன் ( OTR ) ஆதாரை இணைப்பதற்கு டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கியுள்ளது.





தமிழக அரசு பணிகளில் பணிபுரிய தேவைப்படும் அதிகாரிகள் , அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் குரூப் 2 ,குரூப் 2ஏ ஆகிய தேர்வுகள் வருகிற மே மாதம் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடந்த 23ஆம் தேதி முதல்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் தொடங்கிவிட்டது. வருகிற 23-ஆம் தேதி வரை குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளில் தேர்வுகளை எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனிடையே டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதார் எண்களை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்திருந்தது.



இந்நிலையில் தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் இணைப்பதற்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிக்கைகளின் அடிப்படையில், தனது ஒருமுறை நிரந்தர பதிவு கணக்கு (Onetime Registration )மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மேலும் இதுகுறித்து விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி அல்லது helpdesk@tnpscexams.in/ grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணிவரை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புதுச்சேரியில் மார்ச் 19-ல் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு





காவலர் பணிக்கு எழுத்துத் தேர்வு வரும் மார்ச் 19-ம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 29 டெக் ஹாண்டலர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்டது. காவலர் பணிக்கு 13 ஆயிரத்து 971 பேர், டெக் ஹாண்டலர் பணிக்கு 588 பேர் என மொத்தம் 14 ஆயிரத்து 559 விண்ணப்பங்கள் தகுதியானதாக ஏற்கப்பட்டன.


இந்த பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை உடற்தகுதி தேர்வு கோரிமேடு காவலர் மைதானத்தில் நடத்தப்பட்டது. தேர்வின்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 21, 22-ம் தேதிகளில் உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.


டெக் ஹாண்டலர் பணிக்கான உடற்தகுதித் தேர்வு முருங்கம்பாக்கம் நீச்சல் மையத்தில் நடத்தப்பட்டது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 14 ஆயிரத்து 559 பேரில் உடற்தகுதி தேர்வில் 7 ஆயிரத்து 530 பேர் மட்டுமே பங்கேற்றனர். இவர்களில் 2 ஆயிரத்து 207 ஆண்கள், 687 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 894 பேர் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.


இவர்களுக்கான எழுத்து தேர்வு மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் நிர்வாக சீர்திருத்தத் துறை வாயிலாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு, மார்ச் 19-ம் தேதி காலை 10 முதல் மதியம் 12 மணி வரை முதல் தாள், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது.


டெக் ஹாண்டலர் பணிக்கு மார்ச் 20-ம் தேதி காலை 10 மணி முதல் 11.30 மணி வரை எழுத்துத் தேர்வு நடக்கிறது. எழுத்துத் தேர்வு நடக்கும் மையங்கள், ஹால் டிக்கெட் டவுண்லோடு குறித்து விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

 குரூப் 2 தேர்வு மையம்: தேர்வர்கள் அதிருப்தி


உடுமலை:தமிழக அரசு துறைகளில், குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளில், 116 நேர்முக தேர்வு பணியிடங்கள் மற்றும் 5,413 நேர்முக தேர்வு அல்லாத பணி இடங்களுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு, மே 21ல் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதற்கான 'ஆன்லைன்' பதிவு துவங்கிய நிலையில், மார்ச் 23 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


முதல் நிலை எழுத்து தேர்வு, மாவட்ட தலைநகர் மற்றும் மாவட்டத்தில் பிற பகுதிகளில் நடத்தப்படுகிறது. பின், முதன்மை தேர்வு, 20 நகரங்களில் நடத்தப்படவுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில், முதல்நிலை எழுத்து தேர்வுக்கான மையங்கள், திருப்பூர் நகரம், திருப்பூர் தெற்கு, தாராபுரம் தாலுகா பகுதிகளில் அமைக்கப்படுகிறது. தேர்வு ஆணையத்தின் இந்த முடிவு உடுமலை, மடத்துக்குளம் தாலுகா தேர்வர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான தேர்வர்கள், குரூப் 2ல் பங்கேற்க உள்ள நிலையில், உடுமலையில் மையம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தேர்வர்கள் கூறியதாவது: உடுமலையில் கடந்த, 2018ல், குரூப் தேர்வு நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படாத நிலையில், தற்போது, அறிவிப்பு வெளியாகி உள்ளதால், பலரும் தேர்வு எழுத ஆயத்தமாகி உள்ளனர். கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலரும் இத்தேர்வில் பங்கேற்பர். தொலைதுாரம் பயணிக்கும் சூழல் ஏற்பட்டால் சரிவர தேர்வை எதிர்கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.தவிர, உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து, குறித்த நேரத்தில் செல்ல முறையான போக்குவரத்து வசதியும் கிடையாது. இச்சூழலில், உடுமலையில் மையம் அமைக்க திட்டமிடாதது ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.இவ்வாறு, கூறினர்

 தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு






 தேர்வு முறைகேடில் ஈடுபட்டால் ரூ.10 கோடி அபராதம்



ராஜஸ்தானில் ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் கசிவினால் சர்ச்சை ஏற்பட்டது. அதை தடுக்க ராஜஸ்தான் அரசு மசோதா ஒன்றை முன் வைத்தது.


அந்த மசோதாவின்படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டு வரை சிறைதண்டனையும் ரூ.10 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்க முன்மொழிந்தது.


ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிறப்பு நடவடிக்கைக் குழு இதுவரை 40 பேரை கைது செய்துள்ளது.


பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிகளை கட்டுப்படுத்த 1992இல் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி முறைகேடில் ஈடுபடுவோர்க்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டு சிறைதண்டனையும் ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.


இந்நிலையில் சட்டசபையில் 1992இல் சட்டம் இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி பொதுத்தேர்வில் ஒருவரிடமிருந்து அங்கிகரிக்கப்படாத உதவி பெற்றாலோ நவீன தொழில்நுட்ப்பத்தைப் பயன்படுத்தி மோசடி செய்தாலோ அந்த நபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.


ஆள்மாறாட்டம் செய்தாலோ, வினாத்தாளை வெளியிட்டாலோ 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படலாம் என சட்டத்திருத்தம் முன்மொழிந்துள்ளது.


முறைகேடு செய்து புதிய சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட தேர்வர், இரண்டு ஆண்டுகளுக்கு பொது ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பத்தில் இருந்து தடை செய்யப்படுவார்.


தேர்வு செயல்முறையில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தை சேர்ந்தவர்கள் குற்றத்தில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டால், நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட தேர்வு தொடர்பான அனைத்து செலவையும் அந்நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும், மேலும் அந்நிறுவனம் நிரந்தரமாக தடை செய்யப்படும்.


முன்மொழியப்பட்ட சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால் ஜாமீனில் வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்





மதுரை மாவ ட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.


அதன்படி, தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளுக்கு 5,529 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி தேர்விற்கு, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய கட்டிடத்தில் கட்டணமில்லா பயிற்சி சிறந்த வல்லுநர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் குறிப்பிட்ட காலவெளி இடையில் மாதிரித்தேர்வுகள் நடத்தப்படும்.


இப்பயிற்சி வகுப்புகளுக்கு தேவையான பாடக்குறிப்புகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் உருவாக்கப்பட்ட https://tamilnaducareer services.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை மற்றும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு பயிற்சி வகுப்புகளாக நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த அலுவலகத்தில் செயல்படும் நூலகத்தில் அனைத்து வகையான போட்டி தேர்விற்கும் மாணவர்கள் தயார்படுத்திட ஏதுவாக புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.


எனவே, இந்த அலுவலகத்தில் நடைபெறும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பட்டப்படிப்பு முடித்த மனுதாரர்கள் தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று, ஆதார் அட்டை நகல் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தில் ஒரு முறை பதிவு (One time Registration) செய்து இருப்பின், அதன் நகலுடன், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்தகவலை துணை இயக்குநர் மகாலெட்சுமி தெரிவித்துள்ளார்.


 தமிழகத்தில் பேராசிரியர்களுக்கான மாற்றுப்பணி.. வெளியான அதிரடி உத்தரவு...!!!!!



தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அண்ணாமலை பல்கலையின் நேரடி கல்லுாரிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு தேவையானவர்களை விட, அதிகமான பேராசிரியர்கள் பணியில் இருந்தனர்.


இதனால் இவர்களுக்கான சம்பளம் வீணாக போவதை தடுக்கும் அடிப்படையில் வேறு கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டனர்.


இப்பணிக்காலம் இந்த மாதம் முடிய இருந்த நிலையில், மாற்றுப் பணி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் 144 உதவி பேராசிரியர்கள் அண்ணா பல்கலை, பாரதிதாசன், மதுரை காமராஜ், பாரதியார் பல்கலைகள், பாலிடெக்னிக்குகளில் மாற்று பணிகளில் இன்னும் ஓர் வருடத்துக்கு நீடிப்பர் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 டிபிஐ வளாகத்தில் 3,000 சிறப்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்: தேர்தல் வாக்குறுதிப்படி முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்






பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அவர்கள் வாரத்தில் 3 அரை நாட்கள் என மாதம் 12 நாட்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு தொகுப்பூதியமாக முதலில் ரூ.5 ஆயிரம், பிறகு ரூ.7,700 என்றும், தற்போது ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.


வேறு பணி கிடைத்தது போன்ற காரணங்களால் சிலர் விலகிய நிலையில், தற்போது சிறப்பு ஆசிரியர்களாக 12 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குமாறு அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது மாவட்ட அளவிலும், சென்னை டிபிஐ அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கு.சேசுராஜா, மாநில செயலாளர் கு.நவீன், மாநில பொருளாளர் சாமுண்டீஸ்வரி தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் பெண்கள். பலர் குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு பங்கேற்றனர்.


போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநில தலைவர் சேசுராஜா கூறியதாவது:


எங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த 10 ஆண்டு காலமாக போராடி வருகிறோம். ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தை கொண்டு எப்படி வாழ்க்கை நடத்த முடியும். பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று 2016 மற்றும் 2021 திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்துவிட்டன. எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்து, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் 12,500 பேரையும் விரைந்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


சிறப்பு ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக, டிபிஐ வளாகத்திலும், அதன் 3 நுழைவுவாயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 பகுதி நேர ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்



சென்னை:அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கோரி, சென்னையில் பள்ளிக் கல்வி கமிஷனரக வளாகத்தில், முற்றுகை போராட்டம் துவங்கிஉள்ளனர்.


அரசு பள்ளிகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள், 10 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். மாத சம்பளம்ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பாடங்களை, இந்த ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு, 2012ம் ஆண்டு, 5,000 ரூபாய் மாத சம்பளம் வழங்கப்பட்டது. பின், படிப்படியாக சம்பளம் உயர்த்தப்பட்டு, 2016 முதல், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கோரிக்கை


சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தனர். 'பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தி.மு.க., அறிவித்தது.தி.மு.க., ஆட்சி அமைந்து, ஒன்பது மாதங்கள் கடந்து விட்ட நிலையில், பணி நிரந்தர கோரிக்கை நிறைவேறவில்லை. இதையடுத்து, தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர், மாநில தலைவர் சேசுராஜா தலைமையில், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுதும் இருந்து வந்துள்ள, ௨,௦௦௦க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றுள்ளனர். கோரிக்கையை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டத்தை கைவிடப் போவதில்லை என, அறிவித்துள்ளனர். தங்களது பணி நிரந்தர கோரிக்கையை, பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெற செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

 டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே.. இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கு... வெளியான மிக முக்கிய அறிவிப்பு...!!!!!





தமிழகம் முழுவதும் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகிறது.


கடந்த வருடம் கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தொற்று குறைந்து வருவதால் இந்த வருடத்துக்கான தேர்வு கால அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டது. அதில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் எனவும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


அந்த வகையில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதாவது குரூப் 2 தேர்வு வரும் மே மாதம் 21-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி தேர்வுகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை டிஎன்பிஎஸ்சி மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் தகுதி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் 40 மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு மட்டுமே அடுத்த நாள் மதிப்பீடு செய்யப்படும்.


மேலும் இது குறித்து மற்றொரு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கு தேர்வர்களின் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்களின் ஆதார் விபரங்களை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் இதற்கான கால அவகாசம் வருகிற 28ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த கால அவகாசம் முடிய இன்னும் 3 நாட்களே இருப்பதால் தேர்வர்கள் அனைவரும் விரைவாக தங்கள் ஆதார் விவரங்களை இணைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...