18 March 2022

 அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000; தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு




திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுவதாகவும், இத்திட்டத்தின்கீழ், ஆறு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று (மார்ச் 18) தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டின்போது, நிதியமைச்சர் தியாகராஜன், 'மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதலாண்டில் செயல்படுத்த முடியாத நிலை இருக்கிறது.


மகளிருக்கான உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களை கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிட்டார். இதனால், இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.


மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதி அமைச்சர் தியாகராஜன் அறிவிப்பு:உயர் கல்வி திட்டம்மேலும், பட்ஜெட்டின்போது, மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இத்திட்டத்தின்கீழ், ஆறு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும். மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன்மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள். உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் திட்டமாக இது கருதப்படுகிறது.

 புதுச்சேரி அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் - சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற சபாநாயகர் பரிந்துரை



புதுச்சேரியில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் அண்மையில் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டன.அதில் அரசு பள்ளியில் பள்ளி கல்வி துறை இயக்குனர் ருத்ர கவுடு தனது மகனை வீட்டுக்கு அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்தார். அவரை தொடர்ந்து சில போலீசாரும் அரசு ஊழியர்களும் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.


இந்த நிலையில் அரசின் சலுகைகளை அனுபவிக்கும் அரசு ஊழியர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் இயற்ற முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் மணவெளி தொகுதிக்கு உட்பட்ட அரசு ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் சட்டப்பேரவையில் நடைபெற்றது.


பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, இணை இயக்குனர் சிவகாமி உள்ளிட்ட தலைமை ஆசிரியர்கள் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது குறித்தும், கட்டிடம் இல்லாத அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டித் தருவது மற்றும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் உள்ள குறைகளை பேரவைத் தலைவரிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார்கள். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், மணவெளி தொகுதிக்கு உட்பட்ட 16 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களை சந்தித்து அரசு பள்ளியில் உள்ள குறைகளை கேட்டிறிந்ததாகவும், அவர்கள் கூறிய குறைகள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் என்றும் உறுதியளித்தார்.



அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் இயற்ற முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இதனை தொடர்ந்து தனது பிள்ளையை அரசு பள்ளியில் சேர்த்த புதுச்சேரியின் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடுக்கு சால்வை அணிவித்தும் நினைவு பரிசு வழங்கியும் சபாநாயகர் செல்வம் பாராட்டு தெரிவித்தார்.

 அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.




அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில்  தேவை பணியிடங்களில் ஆசிரியர்களை உடனே நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 'எமிஸ்' பணிகளால் ஆசிரியர்களுக்கு எந்த சிரமும் இல்லை  மேலும் ஆசிரியர் நியமனம், டெட் தேர்வு போன்ற கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் பதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் விளக்கம்




கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு எனப்படும் 'எமிஸ்' திட்டப்பணிகளால் ஆசிரியர்களுக்கு எந்த பணிப்பளுவும் இல்லை என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (மார்ச் 17) நடந்தது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


ஆய்வுக்கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''கல்வியும் மருத்துவமும் இரண்டு கண்கள் என்று நம்முடைய முதலமைச்சர் அடிக்கடி கூறுவார்கள். எனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற அடிப்படையில் அதிகாரிகளுடன் இதுபோன்ற ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவதன் மூலம் இத்துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து அறிய முடிகிறது. இங்கு நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அரசுப்பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், பள்ளிகளைத் தரம் உயர்த்துதல் குறித்தும் அதிகளவில் கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்' என்றார்.


இதையடுத்து அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.


கேள்வி: பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்களா?

அமைச்சர்: அவர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்து தேர்தல் அறிக்கையிலும் கூறியிருக்கிறோம். இதுகுறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.


கேள்வி: ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா?

அமைச்சர்: உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்று கணக்கெடுப்பு நடத்திய பிறகு, காலி இடங்கள் இருந்தால் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.


கேள்வி: டிஆர்பி மூலமாக புதிதாக டெட் தேர்வு நடத்தப்படுகிறதே?


அமைச்சர்: ஆர்டிஇ சட்டத்தின்படி ஆண்டுக்கு இரண்டுமுறை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பல ஆயிரக்கணக்கில் உள்ளனர். இந்தமுறையும் டிஆர்பி மூலமாக டெட் தேர்வு நடத்தப்படும்.


கேள்வி: ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகளவில் வருகின்றன. அதைத் தடுக்க நடவடிக்கைகள் என்னென்ன?

அமைச்சர்: பாலியல் குற்றங்களைத் தடுப்பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் பிரச்னைகள் சம்பந்தமான புகார்களை மாணவ, மாணவிகள் 14417, 1098 ஆகிய ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மாணவிகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும் விழிப்புணர்வு பயிற்சி அளித்து வருகிறோம். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில்கூட தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கேள்வி: தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதுதான் பாலியல் புகார்கள் அதிகளவில் வருகின்றன. இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் எத்தனை பேர் இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள் என்ற புள்ளிவிவரங்கள் ஏதேனும் உண்டா?

அமைச்சர்: பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், எத்தனை பேர் இதுவரை டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர் என்ற தரவுகளை இப்போதுள்ள சூழலில் தரலாமா என்று தெரியவில்லை. அதேநேரம், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பலர் மீது வேண்டுமென்றே பாலியல் புகார்கள் தரப்பட்டுள்ள சம்பவங்களும் உள்ளன. பள்ளியில் கடுமையாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது திட்டமிட்டே சிலர் பாலியல் புகார்களை கூறுகின்றனர். பொய் புகார்கள் குறித்தும் தனியாக விசாரித்து வருகிறோம்.


கேள்வி: கல்வியில் பின்தங்கியுள்ள பகுதிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளனவே?

அமைச்சர்: தமிழகம் முழுவதும் 44 வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தமுள்ள 3.50 லட்சம் ஆசிரியர்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள் தெற்கு தமிழகத்தில் இருந்துதான் வந்துள்ளனர். அவர்கள் அங்கு பணியாற்றவே விரும்புகின்றனர். அவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற வட்டாரங்களில் பணியாற்ற ஆசைப்படுவதில்லை. தயவு செய்து ஆசிரியர்கள் இத்தகைய பின்தங்கிய வட்டாரங்களில் பணியாற்ற தாமாக விருப்பப்பட்டு முன்வர வேண்டும்.


கேள்வி: இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களை நியமிப்பதில் சாதிய பாகுபாடு உள்ளதாக கூறப்படுகிறதே?

அமைச்சர்: நிச்சயமாக சாதிய பாகுபாடு கிடையாது. அதேநேரம் இத்திட்டத்தில் பணியாற்ற வரும் தன்னார்வலர்கள் எந்த ஒரு தனிப்பட்ட தலைவரையோ இயக்கத்தையோ சார்ந்தவராக இருந்து விடக்கூடாது. தனது கருத்தை புகுத்தி விடக்கூடிய நபராக இருந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தன்னார்வலர்களின் பேஸ்புக் பக்கம் கூட ஆய்வு செய்யப்படுகிறது. முறையாக தேர்வு வைத்துதான் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுகின்றனர். இல்லம் தேடி கல்வித்திட்டம் பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் 6.60 லட்சம் தன்னார்வலர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் நமக்குத் தேவை 1.76 லட்சம் பேர் மட்டுமே. இப்போது அதையும் தாண்டி 1.78 லட்சம் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்கப்பட்டு, 35 லட்சம் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளி குழந்தைகளும் இத்திட்டத்தில் அதிகளவில் பயன்பெறுகிறார்கள்.


கேள்வி: எமிஸ் பணிகளால் ஆசிரியர்களின் கற்பித்தல் நேரம் குறைந்துவிட்டது. அவர்கள் ஒரு அமைச்சுப் பணியாளரின் வேலையைத்தான் செய்கின்றனர். எமிஸ் பணிகளால் ஈராசிரியர் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளியாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட அவர்கள் குழந்தைகளை விட்டு வெறியேறிவிட்டனரே?

அமைச்சர்: எஜூகேஷனல் மேனேஜ்மெண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம் என்ற எமிஸ் பணிகள் எந்த அளவுக்கு முக்கியம் என்று ஏற்கனவே அதிகாரிகளிடம் சொல்லி இருக்கிறேன். சொல்லப்போனால் இன்றைய ஆய்வுக்கூட்டத்தில் எமிஸ் பற்றிதான் அதிகமாக பேச ஆசைப்பட்டேன். நாங்கள் சேகரித்து வரும் எமிஸ் டேட்டாக்கள் மூலமாக பள்ளிக்கல்வித்துறை மட்டுமின்றி, சுமார் பத்து துறைகளின் செயல்பாடுகளுக்கு பயனளிக்கும். எமிஸ் பணிகளால் ஆசிரியர்கள் கஷ்டப்படுவதாக கூறப்படும் புகார்கள் குறித்து நான்கு நாள்களுக்கு முன்பு கூட ஒரு டெமோ கூட்டம் நடத்தினோம். ஒரு மாணவர் வகுப்புக்கு வந்திருக்கிறாரா இல்லையா? என்பதைப் பார்த்து எமிஸ் பக்கத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். அவ்வளவுதான். இதில் எந்த கடினமும் கிடையாது. சர்வர் பிரச்னையால் காலை 11.30 மணி வரை இதே வேலையாக இருக்க வேண்டியுள்ளதாகச் சொல்கின்றனர். ஒருமுறை ஆப்சென்ட் அல்லது பிரசன்ட் என்று உள்ளீடு செய்துவிட்டால் சர்வர் இணைப்பு கிடைக்கும்போது அப்டேட் ஆகிவிடும்.


ஆனாலும், ஆசிரியர்களின் உணர்வுகளுக்கும் நாங்கள் மதிப்பளிக்கின்றோம். எமிஸ் பணிகளால் வேலைப்பளு இருப்பதாக கருதினால் அதுபற்றி எங்களுக்கு லெட்டர் மூலமாக தெரியப்படுத்தலாம். ஆனால் இதுவரை எமிஸ் பற்றி ஒரு அமைச்சர் என்ற முறையில் என்னிடம் வந்து ஒரு ஆசிரியர் கூட புகார் சொன்னதில்லை. இப்போது சேகரிக்கப்படும் எமிஸ் விவரங்கள் 100 சதவீதம் துல்லியத்தன்மை வாய்ந்தவை. இதன் பலன்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்துத் தெரியும். அப்போது பாருங்கள்.


கேள்வி: எமிஸ் பணிகள் நல்லதுதான். ஆனால் நான் சொல்வது அதைப்பற்றி அல்ல. எமிஸ் பணிகளால் ஆசிரியர்களின் கற்பித்தல் நேரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதைப் பற்றி...?

அமைச்சர்: ஒரு காலத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் 100 பதிவேடுகளைக் கையால் எழுதிக்கொண்டு இருந்தனர். இப்போது அந்த நிலை இல்லை. எமிஸ் திட்டம் என்பது ஏற்கனவே இருந்ததுதான். முன்பு இருந்த பணிப்பளுவோடு ஒப்பிடுகையில் இப்போது வேலைகளை எளிமையாக்கி இருக்கிறோம். உங்கள் குழந்தைகள் பள்ளியில் படிக்கும்போது இதன் பயன்கள் தெரியவரும்.


கேள்வி: பொருளீட்டும் தாய் அல்லது தந்தையரில் ஒருவர் அல்லது இருவரும் விபத்தில் இறந்தால் அவர்களின் குழந்தைக்கு 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை, விபத்தில் இறந்தால் மட்டும் என்றில்லாமல் தற்கொலை, இயற்கை மரணம், குடும்பப் பிரச்னைகளால் ஒற்றை பெற்றோருடன் வளரும் குழந்தைகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்...

அமைச்சர்: உங்கள் யோசனையை பரிசீலிக்கிறோம்.


கேள்வி: தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பாடம் நடத்தாமலேயே நேரடியாக நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கின்றார்களே?

அமைச்சர்: தனியார் பள்ளிகள் 11ஆம் வகுப்பு பாடங்களை நடத்துவதில்லை என்பதால்தான் அதற்கும் பொதுத்தேர்வு நடைமுறையைக் கொண்டு வந்தோம். மறுபடியும் விதிகளை மீறி செயல்படுவதைத் தனியார் பள்ளிகள் உடனடியாக கைவிட வேண்டும்.


இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். பேட்டியின்போது அமைச்சர் மதிவேந்தன், சேலம் எம்.பி. பார்த்திபன், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

 பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 36,895.89 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர்




தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.


பேரவையில் பேசிய அவர்,


தமிழக பட்ஜெட்டில் 36,895.89 கோடி ரூபாய் பள்ளிக்கல்வி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்யும் வகையில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


38 மாவட்டங்களில் 1.8 லட்சம் தன்னார்வலர்களால் செயல்படுத்தப்படுகிறது. இதனால் 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்காக வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


அறிவியல், தொழில்நுட்பம், கலை, மருத்துவம் துறையில் மேம்பட, பின்தங்கிய 10 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும். மேலும் 15 மாவட்டங்களில் எதிர்காலத்தில் கொண்டு வரப்படும், இதற்காக ரூ. 125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


அரசு பள்ளிகளை மேம்படுத்த 'பேராசிரியர் அன்பழகன் திட்டம்' செயல்படுத்தப்படும்.


ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி வகுப்புகள் என பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 1, 300 கோடி செலவு செய்யப்படும்.


அரசின் உதவி பெறாத, தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.' என்றார்

 பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் ஆசிரியர்கள் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை




பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் ஆசிரியர்கள் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் நிலை குறித்து மண்டல ஆய்வுக் கூட்டம் சேலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 2013-ஆம் ஆண்டில் இருந்து 80 ஆயிரம் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்சி பெற்றுள்ளதாக கூறினார்.


ஆசிரியர்களை புதிதாக நியமிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன என்றும் அதை எப்படி சரி செய்வது என்பது தொடர்பாக பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு முதலமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறினார். பொருளாதாரத்தில் பின் தங்கிய 44 வட்டாரங்களில் உள்ள பள்ளிகளில் பணிக்கு வருவதற்கு ஆசிரியர்களிடையே தயக்கம் நிலவுவதாகவும் அன்பில் மகேஸ் சுட்டிக்காட்டினார்.

 தமிழக மருத்துவத் துறையில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு!




தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள்: 238


பணியின் தன்மை: Dark Room Assistant & Junior Analyst


ஊதியம்: ரூ.19,500 – ரூ.62,000 மற்றும் ரூ.36,400 – ரூ.1,15,700/-


வயது வரம்பு: 18-32


கடைசி தேதி: 05.04.2022


மேலும் விவரங்களுக்கு இந்த https://mrb.tn.gov.in/notifications.html லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

 TRB - Polytechnic Lecturer Candidates - ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு

.




 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்து அறிவிக்கை ( அறிவிக்கை எண் . 14/2019 ) 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. 

மேலும் , online வாயிலாக விண்ணப்பங்கள் மற்றும் கல்வித் தகுதி தொடர்புடைய ஆவணங்களும் பெறப்பட்டன . தற்போது விண்ணப்பதாரர்களின் கூடுதல் கல்வித் தகுதிகள் , பணி அனுபவச் சான்றிதழ் , நன்னடத்தை சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை Online வாயிலாக கூடுதலாகப் பதிவேற்றம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு ( 11.03.2022 முதல் 18.03.2022 வரை ) ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன.




இந்நிலையில் பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திட கூடுதல் கால விண்ணப்பதாரர்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன.


 அவகாசம் கோரி எனவே , விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகளை ஏற்று ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கு கால அவகாசம் 18.03.2022 -லிருந்து 25.03.2022 ஆக நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.


 செய்யப்பட்டு மேலும் , விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் மற்ற கோரிக்கைகள் பரிசீலனை வருகின்றன . கோரிக்கைகளுக்கான உரிய பதில் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.




 அகமதிப்பீட்டு மதிப்பெண் தேர்வு:பள்ளிகளில் தேர்வு




உடுமலை;பிளஸ் 2 மாணவர்களுக்கு, அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை அளிக்கும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளிகளில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.பிளஸ் 2, பொதுத்தேர்வு வரும் மே மாதம் நடத்தப்படுகிறது.


முன்னதாக, மாணவர்களின், 'இன்டர்னல்' மற்றும் 'பிராக்டிக்கல்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.அவ்வகையில், அறிவியல் பாடங்களுக்கு, 30 மதிப்பெண்; கணக்கியல் பாடங்களுக்கு, 10 மதிப்பெண்கள் என கணக்கிடப்படுகிறது. அதன்படி, அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதன்படி, உடுமலை கல்வி மாவட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை அளிக்கும் வகையில், மூன்று தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதில், அதிகபட்சமாக பெறும் மதிப்பெண், கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறைத்தேர்வுக்கு முன் சமர்ப்பிக்க வேண்டிய செய்முறை விளக்க குறிப்பு நோட்டுகள், மாணவர்களிடம் சேகரிக்கப்படும். பின்னர், செய்முறை விளக்க நோட்டுகள் மற்றும் அவர்களின் ஆய்வக செயல்பாடுகளை வைத்து, மதிப்பெண் வழங்கப்படும்.இதேபோல், அகமதிப்பீட்டு மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவு செய்ய, ஒவ்வொரு பாடத்திற்கும் பாடக்குறியீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் பள்ளி மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை உறுதி செய்து கொள்வர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 கண்டிப்பது உங்கள் நல்லதுக்கு தான்..ஆசியர்களை மரியாதையுடன் நடத்துங்கள்.. மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை..




ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது மாணவர்களின் நலனுக்காகவே என்று தெரிவித்த அமைச்சர், ஆசிரியர்களை மாணவர்கள் அனைவரும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கூறினார்.


தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக, அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு மண்டல வாரியான ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படும். அந்த வகையில் சேலம் மணடலத்துக்கான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.


மண்டல ஆலோசனை கூட்டம்:


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது மாணவர்களின் நலனுக்காக தான். எனவே ஆசிரியர்களை மாணவர்கள் அனைவரும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கூறினார். மேலும் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் ஆசிரியர்கள் பணிபுரிய தயக்கம் காட்டுகின்றனர் என்று தெரிவித்த அமைச்சர், மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றார்.


மாணவர்களுக்கு மன எழுச்சி கையேடு :


மேலும் கொரனோவின் போது பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிட்டது எனவும் வளர் பருவத்தினருக்கான மன எழுச்சி கையேடு வழங்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக, சேலம் மாவட்டத்துக்கும் பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மேற்பார்வையில் இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டனர்.


கற்றல் மற்றும் கற்பித்தல் திறன்:


மேலும் சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் முறை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேற்று ஆய்வுமேற்கொண்டார். அவர்களுடன் சேலம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட இணை இயக்குனர்களும் ஆய்வில் ஈடுப்பட்டனர். இதனிடயே சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி,தருமபுரி,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...