17 October 2022

 10,402 பின்னடைவு பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் - ராமதாஸ் ட்வீட்!!




பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான 10,402 பின்னடைவு பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படாதது வருத்தமளிக்கிறது! 


அரசுத் துறைகளில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் 10,402 பணியிடங்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படவில்லை. தேவையற்ற இந்த கால தாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்!






பட்டியலின, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகத் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பின்னடைவு பணியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்பட்டிருந்தால்,10,402 குடும்பங்கள் வறுமையிலிருந்தும், சமூக பின்னடைவிலிருந்தும் மீண்டிருக்கும். 


அதை செய்யத் தவறியது சமூக அநீதி! பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான 10,402 பின்னடைவு பணியிடங்களையும் உடனடியாக சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி மூலம் அதற்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்! " என்று குறிப்பிட்டுள்ளார்.

 மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை இன்று வெளியீடு



எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.



தமிழகத்தில், இந்த கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, செப்., 22 முதல் இம்மாதம், 6ம் தேதி வரை, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பப்பதிவு நடந்தது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 22 ஆயிரத்து 643 பேர்; நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 13 ஆயிரத்து 457 பேர் என, மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பித்தனர்.


இதையடுத்து, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அரசின், 75 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இன்று வெளியிடுகிறார். அதன்பின், கலந்தாய்வு நடக்கும் தேதி குறித்த விபரங்களை தெரிவிக்க உள்ளார்.


மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் முத்துச்செல்வன் கூறுகையில், ''மாற்றுத் திறனாளிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு நேரடியாக நடக்கும். ''பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும்,'' என்றார்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...