17 June 2015

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர்களை நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யக்கூடாது: அன்புமணி

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களை நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் நியமனம் நேர்முகத் தேர்வில் போட்டியாளர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இது கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைக்கு மாறானது. இது கடும் கண்டனத்துக்குரியது.தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகளிலும், மேல்நிலைப்பள்ளிகளிலும் 4362 ஆய்வக உதவியாளர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, அதன்பின் மாவட்ட அளவில் நேர்காணல் நடத்தப்படும் என்றும், நேர்காணலில் ஒவ்வொருவரும் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் பணி நியமனம்மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதற்கு அனைத்துத் தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் நேற்று பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, நேர்காணலில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் ஆய்வக உதவியாளர் பணி நியமனம் செய்யப்படும் என்றும், இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.

பொதுவாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய ஆட்சிப் பணி உள்ளிட்ட குடிமையியல் பணிகளுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி-1, தொகுதி-2 பணிகளுக்கும் மட்டும் தான் எழுத்துத் தேர்வும் நேர்காணலும் நடத்தப்படும். தொகுதி-3, தொகுதி-4 பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மூலமாகவே ஆட்கள் நியமிக்கப்படுகின்றார்கள்.

ஆய்வக உதவியாளர் பணி என்பது தொகுதி-4 பணிகளில் வரும் இளநிலை உதவியாளர் நிலைக்கு சமமானது தான். இளநிலை உதவியாளர்கள் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்கப் படும் நிலையில், ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தி, அதிலுள்ள மதிப்பெண்களை கருத்தில் கொள்ளாமல், நேர்முகத் தேர்வு நடத்தில் அதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் பணி நியமனம் செய்யப்படும் என்பது இதுவரை எங்குமே கேள்விப்படாத நடைமுறையாகும்.

கடந்த காலங்களில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படிதான் நிரப்பப்பட்டு வந்திருக்கின்றன. பொது அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்களைப் பெற்று தான் அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பதால் எழுத்துத் தேர்வின் மூலம் ஆய்வக உதவியாளர்களை தேர்ந்தெடுக்கலாம்.

ஆனால், தமிழக அரசு கடைப்பிடிக்கும்புதிய முறை ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இது நேர்மையான நியமனங்களுக்கு வழி வகுக்காது.பொதுவாகவே நேர்காணல்களில் தான் முறைகேடுகள் செய்யப்படுகின்றன என்ற அவநம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.

அதுமட்டுமின்றி, ஒரு மாணவரின் திறமையை மதிப்பிடுவதற்கான தெளிவான வரையரைகள் எழுத்துத் தேர்வில் தான் உள்ளன. அவ்வாறு இருக்கும் போது நேர்காணலின் மூலம் பணி நியமனம் செய்வது ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் மட்டுமே வழி வகுக்கும். எனவே, ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆய்வக உதவியாளர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் நலப் பள்ளி இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

ஆதிதிராவிடர், கள்ளர் நலப் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் 454 பேர் கொண்ட முதல்நிலைத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்தி: ஆதிதிராவிடர், கள்ளர் சீர்திருத்தப் பள்ளிகளில் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை நேரடித் தேர்வு முறையில் பணியில் அமர்த்த 2014 ஆகஸ்ட் 21-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டது. இப்போது, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இடைக்கால உத்தரவு, தமிழக அரசின் அனுமதியின் அடிப்படையில் இந்த முதல்நிலை தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் உள்ளவர்களின் தகுதி, உண்மை சான்றிதழ்கள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரும்பிய இடத்தில் தான் பணியாற்ற வேண்டும் என்று கருதினால் ஆசிரியர் பணியை தேர்வு செய்யக்கூடாது இடமாறுதலை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு

‘விரும்பிய இடத்தில் பணியாற்ற வேண்டும் என்று கருதினால் ஆசிரியர்பணியை தேர்வு செய்யக்கூடாது‘ என்று இடமாறுதலை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இடமாறுதலை எதிர்த்து வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள செவல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள் ஆரோக்கிய அருள்தாஸ், லதாமகேசுவரி. இவர்கள், 2 பேரையும் செங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றுப்பணியாக இடமாறுதல் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யும்படி ஆசிரியர்கள் 2 பேரும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் வி.முருகானந்தம் ஆஜராகி வாதாடினார்.

பரந்த மனப்பான்மை தேவை
மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:- நிர்வாகம் மற்றும் மாணவர்கள் நலன்கருதி மனுதாரர்களை அதிகாரிகள் மாற்றுப்பணியாக இடமாறுதல் செய்துள்ளனர். ஆசிரியர் பணி என்பது இடமாறுதலுக்கு உட்பட்ட பணி தான்.

தங்களது விருப்பம் இல்லாமல் இடமாறுதல் செய்தது தவறு என்று மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. தாங்கள் விரும்பிய இடத்தில் தான் பணியாற்ற வேண்டும் என்று கருதினால் ஆசிரியர் பணியை தேர்வு செய்து இருக்கக்கூடாது. ஆசிரியர் பணி புனிதமானது. ஆசிரியர்கள் பரந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். எதிர்கால சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. ஆசிரியர்கள் தேவையில்லாமல் வழக்கு போட்டு கோர்ட்டு நேரத்தை வீணடிக்கக்கூடாது. சமூகத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்வதற்காக ஆசிரியர்கள் தங்களது ஆற்றலை செலவிட வேண்டும். மனுதாரர்களின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வு.. உடனடியாக ஒத்தி வைக்க தமிழக அரசிடம் சீமான் வலியுறுத்தல்  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்ட...