29 September 2022

 TNPSC: வரும் 14-ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள்.! தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு.! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..‌.!




சேலம்‌ மாவட்டத்தில்‌, ஒருங்கிணைந்த புள்ளியியல்‌ சார்நிலைப்‌ பணிகளுக்கான தேர்வுக்குத்‌ தயாராகும்‌ தேர்வர்கள்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ மூலமாக நடத்தப்படும்‌ பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொண்டு பயன்பெறலாம்‌.


இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ (TNPSC) ஒருங்கிணைந்த புள்ளியியல்‌ சார்நிலைப்‌ பணிகளில்‌ அடங்கிய உதவி புள்ளியியல்‌ ஆய்வாளர்‌, கணக்கிடுபவர்‌ மற்றும்‌ புள்ளியியல்‌ தொகுப்பாளர்‌ ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புள்ளியியல்‌, கணிதம்‌, கணினி அறிவியல்‌, பொருளாதாரம்‌ ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில்‌ பட்டம்‌ பெற்றவர்கள்‌ இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்‌. விண்ணப்பிக்க கடைசி நாள்‌ 14:10.2022 ஆகும்‌. இதற்கான எழுத்துத்தேர்வு வருகின்ற 29.01.2023 அன்று நடைபெற உள்ளது.


இத்தேர்விற்கான இலவசப்‌ பயிற்சி வகுப்புகள்‌ மற்றும்‌ வழிகாட்டுதல்‌ நிகழ்ச்சி சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ மூலமாக 30.09.2022 அன்று காலை 10.00 மணி அளவில்‌ துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள்‌ ஏற்கனவே போட்டித்‌ தேர்வுகளில்‌ வெற்றி பெற்ற சிறந்த பயிற்றுநர்கள்‌ மற்றும்‌ தொடர்புடைய துறை சார்ந்த வல்லுநர்களைக்‌ கொண்டு நடத்தப்பட உள்ளன. மேலும்‌ பாடக்குறிப்புகள்‌ வழங்கப்படுவதுடன்‌ தொடர்ச்சியாக மாதிரித்‌ தேர்வுகளும்‌ நடத்தப்படவுள்ளன.


இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 94990 55941 என்ற தொலைபேசி எண்ணில்‌ அலுவலக வேலை நாட்களில்‌ காலை 0.00 மணி முதல்‌ மாலை 5.45 மணிக்குள்‌ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்‌. மேலும்‌ இப்பயிற்சி வகுப்பில்‌ கலந்துகொள்ள விருப்பமுள்ள நபர்கள்‌ இப்பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்‌ மற்றும்‌ பாஸ்போர்ட்‌ அளவு புகைப்படம்‌ ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்‌.


சேலம்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த ஒருங்கிணைந்த புள்ளியியல்‌ சார்நிலைப்‌ பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும்‌ தேர்வர்கள்‌ இப்பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொண்டு பயன்பெறலாம்‌ என மாவட்ட ஆட்சியர் தலைவர் தெரிவித்துள்ளார்

  அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வெளியீடு... அதிகாரப்பூர்வமான அறிவிப்பு.!!!!



அண்ணா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் பல கல்லூரிகளில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்பு படித்து வருகின்றனர்.



தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல்காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது செமஸ்டர் தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைகத்தின் கீழ் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 


அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் http://www.annauniv.edu/nwsnew/என்ற அதிகாரப்பூர்வமான தளத்தில் தங்களின் ரிஜிஸ்டர் நம்பர் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 TNPSC குரூப் 2 &2A மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியீடு.!



தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 5413 பதவிகளுக்கு கடந்த மே மாதம் 21ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2A முதல் நிலை தேர்வுகள் நடைபெற்றன.


இதற்கான தேர்வு முடிந்து மூன்று மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு எப்பொழுது வெளியாகும் என்று தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.


இத்தகைய சூழலில், குரூப்-2 மற்றும் குரூப் 2A தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாகவும், குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


 'டிஎன்பிஎஸ்சி மூலம் நியாயவிலைக்கடை பணியாளர்களை நியமிக்க வேண்டும்'.. டாக்டர் ராமதாஸ்





நியாயவிலைக் கடை பணியாளர்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நேர்காணலின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்காமல் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்க தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-


தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிகளுக்கு 4,000 பேரை நியமிக்க தமிழக அரசின் கூட்டுறவுத் துறை முடிவு செய்திருக்கிறது.


இந்த பணியிடங்கள் அனைத்தும் மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் என்ற அமைப்பின் மூலம் மாவட்ட அளவில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, இந்த நியமனங்கள் சரியாக நடக்குமா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டில் பொது வினியோகத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு சங்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் 25,044 முழு நேர நியாயவிலைக் கடைகள் 10,279 பகுதிநேர நியாயவிலைக்கடைகள் என 35,323 நியாயவிலைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்கள் ஏராளமாக காலியாக இருக்கும் நிலையில், அவற்றில் 4000 பணியிடங்களை நேர்காணல் மூலம் நிரப்ப கூட்டுறவுத் துறை தீர்மானித்திருக்கிறது.



இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அக்டோபர் 13-ஆம் தேதி வெளியிட்டு, நவம்பர் 14-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்று, டிசம்பர் மாதம் 15 முதல் 30-ஆம் தேதி வரை நேர்காணல்களை நடத்தி ஆட்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களுக்கு அவற்றின் பதிவாளர் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். நியாயவிலைக்கடை விற்பனையாளர், கட்டுனர் பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தாமல், வெறும் நேர்காணலை மட்டும் நடத்தி ஆட்களை தேர்வு செய்வது ஐயத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்காது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை நியாயவிலைக் கடைப்பணியாளர்கள் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வந்தனர். ஆனால், வேலைவாய்ப்பக பதிவின் அடிப்படையில் மட்டும் பணி நியமனங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும், ஆள்தேர்வு குறித்து பொது அறிவிப்பு வெளியிட்டு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்யாதவர்களிடமிருந்தும் விண்ணப்பங்களைப் பெற்று தான் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், இரு தரப்புக்கும் வாய்ப்பளிக்க வேண்டியுள்ளது. இரு தரப்பினரின் தகுதி மற்றும் திறமைகளை அளவிடுவதற்கு போட்டித் தேர்வு தான் சரியானதாக இருக்குமே தவிர, நேர்காணல் சரியான முறையாக இருக்காது.


தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கும் கூடுதலான கல்வித் தகுதி கொண்ட அனைத்துப் பணிகளுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வு நடத்தி, அதில் ஒவ்வொருவரும் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் தான் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட பணிகளுக்கே போட்டித் தேர்வு மூலம் தான் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் எனும் போது, 12-ஆம் வகுப்புத் தகுதி கொண்ட விற்பனையாளர் பணிக்கும், பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட கட்டுனர் பணிக்கும் போட்டித்தேர்வு நடத்தாமல் நேர்காணல் நடத்துவது முறையல்ல.



அதிலும் மாவட்ட அளவில் நேர்காணல் நடத்துவதால், தகுதியும், திறமையும் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு, அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமானோர் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இது பெரும் சமூக அநீதி. இந்த அநீதி தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் ஆகியவற்றுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, அவற்றுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமே இனி தேர்ந்தெடுத்து வழங்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.


அதற்கான சட்டத் திருத்தமும் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டது. இதற்கான காரணங்கள் அனைத்தும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் நியமனத்திற்கும் பொருந்தும் எனும் நிலையில், அவர்களை மட்டும் மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் தேர்ந்தெடுக்க அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்? இது தமிழக அரசின் நோக்கத்தையே சிதைத்து விடக்கூடும்.



கடந்த 2017-ஆம் ஆண்டில், அப்போதைய அதிமுக ஆட்சியின் போது நியாயவிலைக்கடை ஊழியர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்க முயற்சிகள் நடந்த போது அதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. ஒரு கட்டத்தில் அந்த ஆள் தேர்வு கைவிடப்பட்டது. இப்போது நீண்ட காலத்திற்கு பிறகு நியாயவிலைக் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான நடைமுறை ஐயத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தால் தான் ஏழை இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.



இதைக் கருத்தில் கொண்டு, நியாயவிலைக் கடை பணியாளர்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நேர்காணலின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். சமவாய்ப்பையும், சமூகநீதியையும் உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியாயவிலைக் கடை பணியாளர்களை தேர்ந்தெடுக்கவும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...