1 December 2014

நாடு முழுவதும் பின்பற்றப்படும் 10+2+3 கல்வி முறை மாறுகிறது: வருகிறது பல சிறப்பம்சங்களுடன் புதிய 8+4+3 திட்டம் இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்ற, மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஒரு அமைப்பான, பி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தை, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதன்படி, 8+4+3 என, விரைவில் கல்வி முறை மாற உள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மூன்றாம் மொழிப்பாடமாக இருந்த ஜெர்மன் நீக்கப்பட்டு, சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டது. அது போல, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கல்வி முறையை கொண்டு வருவதற்காக, மாநில பட்டியலில் உள்ள கல்வியை, மத்திய பட்டியலில் சேர்க்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.அந்த வகையில், இம்மாதம், 17 மற்றும் 18ம் தேதிகளில், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள, ஆர்.எஸ்.எஸ்.,சின் கல்வி பிரிவான, 'பாரதிய சிக் ஷா மண்டல் - பி.எஸ்.எம்.,' மாநாட்டில், புதிய கல்வி முறைக்கான வரைவுத் திட்டம் வெளியிடப்பட உள்ளது.அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 என்ற முறை மாற்றப்பட்டு, 8 + 4 + 3 என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த, அந்த மாநாட்டில் விரிவான விவாதம் நடத்தப்பட உள்ளது. ஸ்மிருதியுடன் சந்திப்பு: பிரதமர் மோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மூத்த அமைச்சர் வெங்கையா நாயுடு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா போன்ற பலர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலிருந்து, பா.ஜ.,வில் இணைந்தவர்கள். பா.ஜ.,வை கட்டுப்படுத்தும் உயரிய அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., விளங்குகிறது என சொல்லப்படுகிறது.இந்திய கல்வி முறையில் மாற்றத்தை கொண்டு வர, மத்திய அரசு, படிப்படியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னோடியாக, கடந்த அக்., 30ல், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் சிலர் சந்தித்தனர் என, டில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர்கள், சுரேஷ் சோனி, தத்தாத்ரேயா ஹோசபலே போன்றோர், அமைச்சர் ஸ்மிருதியை சந்தித்து, கல்வி முறையை எந்தெந்த விதங்களில் மாற்ற வேண்டும் என கூறியதன் அடிப்படையில் தான், மத்திய அரசு, சமீப காலமாக செயல்படுகிறது எனவும் கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., சொல்வதென்ன? *வெறும் எழுத்தர்களை உருவாக்கும், மெக்காலே கல்வி முறையை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும். சிந்திக்கத் தெரிந்த, நாட்டின் நலன், பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை போன்றவற்றுடன் இயைந்தவாறு கல்வி முறை இருக்க வேண்டும். *நவீன தொழில்நுட்ப யுக்திகளுடன், பாரம்பரிய கல்வி முறையையும் இணைத்து, புதியதொரு கல்வி முறை பின்பற்றப்பட வேண்டும். பொறுப்பு யார் வசம்? கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற, ஆர்.எஸ்.எஸ்., அதற்கான வடிவமைப்பு, செயல்திட்டத்தை, அந்த அமைப்பின் சிறந்த கல்வியாளரான தினாநாத் பத்ராவிடம் வழங்கியுள்ளது. அவர், இதற்காக ஆராய்ச்சி செய்து வடிவமைத்துள்ள கல்விமுறை, குஜராத்தில் பின்பற்றப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுகிறது. புதிய கல்வி திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன: *இப்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 கல்வி முறை, 1968ல், கோத்தாரி கமிஷன் பரிந்துரைப்படி அமலில் உள்ளது; இந்த முறை, விரைவில் மாற்றப்பட உள்ளது. *மாணவர்களின் முதல் எட்டாண்டு படிப்பு, தனி பிரிவாகவும்; அதன் பின், நான்காண்டு தனிப்பிரிவாகவும்; அதன் பின், மூன்றாண்டு தனிப்பிரிவாகவும் பிரிக்கப்பட உள்ளது. *முதல் எட்டாண்டு படிப்பு, மாணவர்களின் அடிப்படை கல்வி தொடர்பானதாக இருக்கும்; இதில், அவர்களின் தாய்மொழி தான், முதல் மொழியாக இருக்கும்; ஆங்கிலம், இந்தி துணை மொழிகளாக இருக்கும். *முதல் எட்டாண்டு படிப்பில், கணிதம், பொது அறிவியல், சமூக அறிவியல், உடற்கல்வி, வேலை, சுத்தம், பாரம்பரிய கல்வி, சமூக சேவை ஆகிய பாடப்பிரிவுகள் இருக்கும். *முதல் எட்டாண்டு படித்து முடிக்கும் மாணவன், விரும்பினால், படிப்பை அத்துடன் நிறுத்திக் கொண்டு, தொழில்கள் செய்யவோ, அல்லது தொழிற்கல்வி படிக்கவோ செய்யலாம். *அதன் பின், விரும்பினால், நான்காண்டு படிப்பை தொடரலாம். கல்லூரி மட்ட படிப்பு: *நான்காண்டு படிப்பு, கல்லூரி மட்ட படிப்பை ஒரே வீச்சில் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விரும்பினால், முதலாண்டுடன் நிறுத்திக் கொள்ளலாம்; அப்போது முதலாண்டு சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு முடித்த பிறகு, இன்னொரு சான்றிதழ் வழங்கப்படும்; அது, டிப்ளமோ சான்றிதழாகவும், மூன்றாம் ஆண்டு, டிகிரி சான்றிதழாகவும், நான்காம் ஆண்டு சான்றிதழ், ஹானர்ஸ் டிகிரி சான்றிதழாகவும் வழங்கப்படும். *இதனால், கல்வி, தொழில் ரீதியாகவும், நாட்டின் உற்பத்திக்கு உகந்ததாகவும் இருக்கும். *எந்த படிப்பில் சேரவும், நுழைவுத் தேர்வு முறை இருக்காது என்பது, பி.எஸ்.எம்., வரைந்துள்ள கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சம். மதிப்பெண் மட்டுமின்றி, பிற தகுதிகளும், பொருளாதாரமும் கவனத்தில் கொள்ளப்படும். *எல்லா வகையான படிப்பிலும், செய்முறை எனப்படும் பிராக்டிகல் அவசியம் இருக்கும்.
இடஒதுக்கீட்டில் அலட்சியம் : மாற்றுத்திறனாளிகள் அரசுபணியில் புறக்கணிக்கப்படும் அவலம் அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டைதமிழக அரசு முறையாக பின்பற்றாத காரணத்தால் ஒரு சதவீதத்திற்கும் குறைவான நபர்களே பயனடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். தமிழக அரசை பொறுத்தவரையில் டிஎன்பிஎஸ்சி மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் 3 சதவிதம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு பணியிடங்களில் ஆட்கள் தேர்வு செய்யும்போது, 69 சதவித இடஒதுக்கீடு, பெண்களுக்கான 33 சதவித இடஒதுக்கீடு ஆகியவை சரியாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதே சமயம் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த விஷயத்தில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்த நியமனத்தில் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே, இது குறித்து உண்மை அறிய, தலைமை செயலாளரின் தலைமையில் பல துறைகளை சேர்ந்த செயலாளர்களை ஒருங்கிணைத்து 15 பேர் கொண்ட குழுவை அரசு கடந்த 2012ம் ஆண்டு அமைத்தது. இக்குழுவின் முக்கிய வேலை, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை கூடி துறைகளில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் அளிக்கப்பட்ட விவரங்கள் மற்றும்நிரப்பப்படாத காலி பணியிடங்களை முன்கொணர்தல் போன்றவற்றை ஆராயும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இக்குழு அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் மாற்றுத்திறனாளிகளை அரசு வேலைகளில் பணியமர்த்துவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதன்படி, 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியும் அரசு அலுவலகங்களில் 3 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் பார்த்தால் 36,000 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க வேண்டும். ஆனால், சுமார் 3,500 மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, பார்வையற்றோருக்கான கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தை சேர்ந்த சிவக்குமார் கூறியதாவது: தமிழக அரசு 3 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணிகளை வழங்காததால் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறோம். அரசு பணிகளை பெறுவதற்கான கல்வி தகுதி இருந்தும் மாற்றுத்திறனாளிகளில் பலர் ரயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது உட்பட பல சிறுதொழில்களை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அரசு பணியிடங்களில் இதுவரை ஒரு சதவீதத்திற்கும் குறைவான இடத்திலேயே மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்து வருகிறோம். எந்த உயர் பதவிகளிலும் மாற்றுத்திறனாளிகளை அரசு அமர்த்துவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...