7 March 2025

புதுச்சேரி மத்திய பல்கலை.க்கு புதிய துணைவேந்தா் நியமனம்




புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்தியப் பல்கலை.க்கு புதிய துணைவேந்தராக ஹைதராபாத் பல்கலைக்கழக பதிவாளா் பனித்தி பிரகாஷ் பாபு நியமிக்கப்பட்டுள்ளாா்.


 புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் மத்தியப் பல்கலை. உள்ளது. இதன் துணைவேந்தராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் குா்மீத் சிங் நியமிக்கப்பட்டு, கடந்த 2023 நவம்பரில் பணி ஓய்வு பெற்றுச் சென்றாா்.


இதையடுத்து, மத்திய பல்கலை.யின் வேதியியல் துறை பேராசிரியரும், கல்விப் பிரிவின் இயக்குநருமான க.தரணிக்கரசு துணைவேந்தா் பொறுப்பை கவனித்து வந்தாா்.


இந்த நிலையில், ஹைதராபாத் பல்கலை.யின் உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தகவலியல் துறை முதுநிலை பேராசிரியரான பனித்தி பிரகாஷ் பாபு, புதுவை பல்கலை.யின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளாா்.


இதற்கான உத்தரவை, மத்திய அரசின் கல்வித் துறை இயக்குநா் சுபாஷ்சந்த் ஷாரு பிறப்பித்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 பிளஸ் 2 ஆங்கிலத் தோ்வு சற்று கடினம்



பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தைத் தொடா்ந்து ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளும் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.


தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கியது. முதல் தோ்வாக தமிழ்ப் பாடத்துக்கான தோ்வு நடைபெற்ற நிலையில், அதில் பல்வேறு வினாக்கள் நன்கு யோசித்து பதிலளிக்கும் வகையில் இருந்தன. இதனால், அந்தத் தோ்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்திருந்தனா்.


இரண்டாவது தோ்வான ஆங்கில பாடத்துக்கான தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து மாணவா்கள் கூறுகையில், ஆங்கில வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பகுதியில் 4 வினாக்கள் கடினமாக இருந்தன. 


அதேபோன்று இரு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற 4 கேள்விகளும் சற்று யோசித்து பதிலளிக்கக் கூடிய வகையில் கேட்கப்பட்டிருந்தன. குறிப்பாக, இலக்கணப் பகுதி வினாக்கள் கடினமாகவே இருந்தன. இருப்பினும் 80 மதிப்பெண்களுக்கும் மேல் கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.


இதைத் தொடா்ந்து, பிளஸ் 2 வகுப்புக்கு மாா்ச் 11-ஆம் தேதி கணிதம், வணிகவியல் ஆகிய தோ்வுகள் நடைபெறவுள்ளன.

 கவுரவ விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் காலி பணியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் கோவி‌.செழியன் பேட்டி



தமிழகத்தில் இம்மாத இறுதிக்குள் கவுரவ விரிவுரையாளர் மற்றும் ஜூன் மாதத்திற்குள் பேராசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என உயர்கல்வி துறை அமைச்சர் கோவி‌.செழியன் கூறினார்.


ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அரசு கல்லூரியாக மாற்றப்பட உள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் அமைச்சர்கள் கோவி.செழியன், சு.முத்துசாமி ஆகியோர் இன்று காலை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 


பின்னர் அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குறித்த குற்றச்சாட்டு நீதிமன்றத்திலும் காவல்துறையிலும் இருக்கிறது. தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆளுநர் ரவி பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.


யுஜிசி திருத்தங்களை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானத்தை முதலமைச்சர் நிறைவேற்றி இருக்கிறார். ஆந்திர சட்ட மன்றத்திலும் இதேபோல் எதிர்ப்பு வந்திருக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகா முதலமைச்சர்களும் வலுசேர்த்து இருக்கிறார்கள்.


 ஆளுநருக்கு உரிய பணி என்ன? அதை எந்த காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். அதை நெறிமுறை படுத்துவது எவ்வாறு என கேட்டு, இந்தியாவில் முதன்முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதும் தமிழ்நாடு தான். தீர்ப்பு நிலுவையில் உள்ளது.


தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில், 2200 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்திருக்கிறோம். அது போதிய அளவில் இல்லை. இந்த மாதம் 6, 7, 8 தேதிகளில் செட் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட இருக்கிறது.


 அதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபரில் மீண்டும் ஒருமுறை செட் தேர்வு நடத்தி காலி பணியிடங்கள் நிரப்பப்படும். மார்ச் இறுதிக்குள் ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்களும், ஜூன் மாதத்திற்குள் 4 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும். 


கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க கோரிக்கைகள் ஈரோட்டில் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஒப்புதல் பெற்று அறிவிக்கப்படும். இவ்வாறு கோவி.செழியன் கூறினார்.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...