ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறை வேண்டும்கருணாநிதி அறிக்கை
ஆசிரியர் தகுதி தேர்வில் அனைவருமே 60 சதவீத மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்பது இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானது என்று கருணாநிதி தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது

கேள்வி:- சான்று சரிபார்ப்பு ஏற்கனவே முடித்தவர்கள் டி.இ.டி. தேர்வு (தகுதித்தேர்வு) எழுத தேவையில்லை என்று உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்யப்போவதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்:- 2010-ம் ஆண்டு மே மாதத்திலேயே சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டதால், ஆசிரியர் தகுதித்தேர்வு இல்லாமல், பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரி, 70 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கு, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர்களை ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டுமென்று வற்புறுத்தாமல், பணியில் நியமிக்க வேண்டும்” என்று ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

 இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்திருப்பதாக வந்துள்ள செய்தி உண்மையாக இருக்குமேயானால் அது ஆசிரியர்களுக்கு எதிராக இந்த அரசு எடுக்கின்ற முடிவாகவே இருக்கும்.

கேள்வி:- ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு முறை வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். ஆசிரியர்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். ஆனால் அரசு அதைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லையே?

பதில்:- ஆசிரியர் தகுதித்தேர்வில் அனைவருமே 60 சதவிகித மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.இது இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான அறிவிப்பாகும். தமிழகத்தில் அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரியாக 60 மதிப்பெண் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது சரியில்லை. 

தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு கொள்கை தமிழகத்தில் பின்பற்றாத காரணத்தால், பாதிக்கப்பட்ட நாகையைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கே.குமரவேலு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது, நீதிபதி அரி பரந்தாமன், “வழக்கில் உள்ள நியாயத்தை மறுக்கவில்லை, ஆனால் இதற்கு முன்பு நீதிபதி சந்துரு அளித்த தீர்ப்பில் இடஒதுக்கீட்டை ஏற்க முடியாது என்று கூறியுள்ளதால், இந்த மனுவினை தள்ளுபடி செய்கிறேன்” என்று தீர்ப்பளித்திருக்கிறார். 

ஆனால் எத்தனையோ வழக்குகளில் ஒரு நீதிபதி அளித்த தீர்ப்புக்கு மாறாக மற்றொரு நீதிபதி தீர்ப்பளித்திருப்பதை கண்டிருக்கிறோம். 

எனவே இந்த பிரச்சினையில் இடஒதுக்கீட்டு கொள்கை பற்றிய முக்கியத்துவம் கருதி, டிவிஷன் அமர்வில் மேல்முறையீடு செய்யப்போவதாக செய்தி வந்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

Comments

Popular posts from this blog