புதுச்சேரி அரசு பள்ளிகளில் 9 ஆம் வகுப்புவரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல் - கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உத்தரவு



புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டில் CBSE பாடத்திட்டம் தொடங்கப்படுவதால், அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.


புதுச்சேரிக்கு என்று தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. 


கடந்த 2011-ஆம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் அரசு, CBSE பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற் கொண்டது. அதன்படி 2014-15-ஆம் கல்வி ஆண்டு முதல் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிற்கு CBSE பாடத்திட் டம் அமல்படுத்தப்பட்டது.


இதனை தொடர்ந்து கடந்த 2018-19-ம் கல்வி ஆண்டில் 5-ம் வகுப்பு வரை மாட்டும் CBSE பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 6-ம் வகுப்பில் இருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டம் விரிவாக்கப்படவில்லை.


 அதனை இந்த கல்வி ஆண்டில் இருந்து 6-ஆம் வகுப்பில் CBSE பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனுமதி கேட்டு, புதுவை பள்ளிக் கல்வித்துறை சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு விண்ணப்பித்திருந்தது.


இந்த நிலையில், புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டில் CBSE பாடத்திட்டத்தினை அமல்படுத்தப்படுவதாக புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், புதுச்சேரி அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 9ஆம் வகுப்புவரை CBSE பாடத்திட்டத்தினை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து விண்ணப்பங்களையும் அரசிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog