சமூக நீதிக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

சமூக நீதிக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள்மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான தகுதித் தேர்வுகள் வரும் ஆகஸ்டு மாதம் 17 மற்றும் 18–ந் தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. 

இத்தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 17–ந் தேதி முதல் விற்பனை செய்யப்படவுள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே 2 முறை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் சராசரியாக 1½ சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வுகளுக்கான விதிமுறைகள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக அமைந்திருப்பதும், தேர்வுக்கான பாடத்திட்டம் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் இல்லாமல், சிறப்புப் பயிற்சி நிறுவனங்களில் படித்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்றநிலையில் வடிவமைக்கப்பட்டிருப்பதும் தான் இதற்குக் காரணம் ஆகும். 

எது சமூக நீதி? ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வுகள் நடத்தப்படும்போது, அதில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்கள் ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது தான் சமூக நீதியாகும். 

அண்டை மாநிலமான ஆந்திராவில் இத்தகைய ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களாக பொதுப்பிரிவினருக்கு 60 சதவீதம், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீதம், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 40 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 

தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் மூலம்நடத்தப்படும் ‘செட்’ தகுதித் தேர்வில் வெற்றிபெற பொதுப்பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நிலையில், மற்ற பிரிவினர் 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் போதுமானது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் ஆனால், இந்த நியதிக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெற அனைத்துப் பிரிவினரும் 60 சதவீத மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது. இதை மாற்றி ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப்பிரிவினருக்கும் தனித்தனி தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

தமிழக சட்டப்பேரவையிலும் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தின. ஆனால் தமிழக அரசு, ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு வழங்கமறுத்து, அனைத்து பிரிவினருக்கும் ஒரே தகுதி மதிப்பெண்களை நிர்ணயித்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது சமூக நீதிக்கு எதிரானது. 

சமூக நீதிக்கு எதிரானது ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தான் திறமையான ஆசிரியர்களாக திகழ முடியும் என்ற எண்ணமே தவறானதாகும். நகர்ப்புறங்களில் காளான்களைப்போல முளைக்கும் சிறப்புப் பயிற்சி நிறுவனங்களில் படித்தால் மட்டுமே ஆசிரியர்களாக முடியும் என்ற நிலையைத்தான் இது ஏற்படுத்தும். 

இதனால், கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு ஆசிரியர் பணி என்பதே காணல் நீராகிவிடும். தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்வதைவிட, பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஓராண்டிற்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிப்பதன் மூலமும், இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் ஆசிரியர் படிப்புக்கான பாடத்திட்டத்தை மேம்படுத்துவதன் மூலமும் தலைசிறந்த ஆசிரியர்களை உருவாக்க முடியும். 

எனவே, சமூக நீதிக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே இருந்தவாறு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்களை பணியமர்த்தும் முறையை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog