புலி வருது! புலி வருது!... - பழைய கதையை சொல்லும் டி.ஆர்.பி.--தினமலர் சென்னை: அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் பட்டியலை வெளியிடுவதில், இதோ, அதோ என்று டி.ஆர்.பி. தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இதனால், ஆசிரியப் பட்டதாரிகள் ஆவேசமும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். கடந்த 2013ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் TET தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு மதிப்பெண் சலுகை மற்றும் பல்வேறான வழக்குகள் என்று இழுத்துக்கொண்டு சென்றதால், அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்வுசெய்து பணியமர்த்துவதில் தொடர்ந்து சிக்கல் நிலவியது. மதிப்பெண் பிரிவினருக்கான இடஒதுக்கீடு சலுகையால் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதனிடையே, புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகம் செய்யும்படி, தேர்வர்கள் தாக்கல் செய்த ஒரு வழக்கில், உயர்நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, புதிய வெயிட்டேஜ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஒருவழியாக நீதிமன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வந்த நிலையில், புதிய வெயிட்டேஜ் முறைப்படி, தேர்வெழுதியவர்கள் ஒவ்வொருவரும் பெற்ற வெயிட்டேஜ் மதிப்பெண் விபரங்கள் TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதனையடுத்து, அதில் பிழைகள் இருந்தால் சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு, ஜுலை 30ம் தேதி, தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும் என்று TRB தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், ஜுலை 30ம் தேதி இல்லையெனில், 31ம் தேதியாவது முடிவுகள் வெளியாகும், எப்படியாவது, ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் முடிவுகள் வெளியாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், TRB இணையதளத்தின் முன், தேர்வர்கள் தவமாய் தவம் கிடந்ததுதான் மிச்சம். முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால், பொறுமையின் எல்லைக்கே சென்றனர் தேர்வர்கள். ஆகஸ்ட் 1ம் தேதி அனைத்து செய்தித்தாள்களிலும் இவ்வாறு செய்திகள் வெளிவந்தன. "தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 11,226 பேர் உட்பட, தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 4,000 பேர் அடங்கிய பட்டியலையும் சேர்த்து, மொத்தம் 15,226 பேருக்கான இறுதி பட்டியல், ஆகஸ்ட் 1ம் தேதி காலையோ அல்லது பிற்பகலிலோ வெளியிடப்பட்டு விடும்" என்பதுதான் அந்த செய்தி. அவற்றைப் படித்த தேர்வர்கள், மீண்டும் மகிழ்ச்சியும், பரபரப்பும் அடைந்தனர். ஆனால், அன்றும், முழுநாள் தவம் கிடந்ததுதான் மிச்சம். முடிவுகள் வெளியாகவில்லை. டி.ஆர்.பி. என்னதான் சொல்ல வருகிறது? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்? காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகிறது... தேர்வர்கள் சிலர் கூறியதாவது: பி.எட்., முடித்து 10 ஆண்டுகள் ஏன், அதற்கும் மேலாக 20 ஆண்டுகளை கழித்தவர்கள் எல்லாம் உள்ளனர். இவர்களில், சாதி ஒதுக்கீடு, கலப்புத் திருமணம், ராணுவ வீரர் பிள்ளைகள் மற்றும் ஊனமுற்றோர் ஆகிய பல்வேறு சலுகைகள், TET தேர்வுமுறை கொண்டு வரப்படும் முன்னதாக, பிராந்திய மற்றும் DPI அளவில் சான்றிதழ் சரிபார்ப்பை முடித்தவர்கள் என்று பல்வேறு முன்னுரிமை சலுகைப் பெற்றவர்கள், தங்களுக்கு அரசு வேலை கிடைக்காதா? என மிகப்பெரிய ஏக்கத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டுள்ளனர். புதிய பட்டதாரிகளின் மேல் ஏன் இவ்வளவு அக்கறை? கடந்தாண்டு அல்லது இந்தாண்டு பி.எட்., படிப்பை முடித்தவர்களுக்கு பெரிதாக எந்தக் கவலையும் இருக்கப்போவதில்லை. அவர்கள் ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படவுமில்லை. கடந்த 2012ம் ஆண்டு, அதே ஆண்டில் பி.எட்., முடித்த பலர், TET தேர்வையெழுதி, எந்தவித அனுபவமோ, அறிமுகமோ இல்லாமல், தகுதியான ஆசிரியர்கள் என்ற போர்வையில், உடனடி பணி வாய்ப்புகளைப் பெற்றனர். மேலும், 2013ம் ஆண்டிலும், உடனடியாக TET தேர்வை நடத்தாமல், புதிதாக படித்துவரும் பி.எட்., பட்டதாரிகளும் தேர்வையெழுத வேண்டும் என்று, பல்லாண்டுகளாக பி.எட்., முடித்து காத்திருப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல், ஆகஸ்ட் மாதம் தேர்வை நடத்தியது டி.ஆர்.பி. இதனால், அந்த கல்வியாண்டில், வேறு மேற்படிப்புகள் எதிலேனும் சேரலாம் என்று நினைத்தவர்களின் பிழைப்பில் மண் விழுந்தது. எனவே, அனைத்துவித தகுதிகளையும், ஏன், தேவைக்கும் அதிகமான தகுதிகளைப் பெற்றிருந்தும், பல்லாண்டுகளாக அரசுப் பணிகளுக்கு ஏங்கி நிற்கும் நபர்களை மனதில் வைத்து, இனியும் தாமதிக்காமல், தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும். தேவையின்றி, எங்களின் வாழ்க்கையோடு டி.ஆர்.பி. விளையாட வேண்டாம் என அவர்கள் ஆவேசமாய் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog