இந்த ஆண்டில் இதுவரை 29 போட்டி தேர்வுகள்: டிஎன்பிஎஸ்சி தகவல்
தமிழகத்தில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட 29 போட்டி தேர்வில் 24 தேர்வுகளின் முடிவு வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2018ம் ஆண்டில் பல்வேறு பணிகளுக்கான போட்டி தேர்வுக்கான 31 அறிவிப்புகளை வெளியிட்டது. அனைத்திற்கும் தேர்வுகள் நடத்தி மிகக் குறுகிய நாட்களில் முடிவுகளை வெளியிட்டு மிகப் பெரும் சாதனை படைத்துள்ளது. 
மேலும் 2019ம் ஆண்டில் தற்போது வரை 29 போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் 24 (23 நேர்முக தேர்வுடன் கூடிய பதவிகள், 1
நேர்முகத்தேர்வு அல்லாத பதவி) பதவிகளுக்கான தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள 23 நேர்முகத்தேர்வுடன் கூடிய பதவிகளில் 14 பதவிகளுக்கான நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 தேர்வுகளுக்கான நேர்காணல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 18 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அவற்றில் 14 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் 5 தேர்வுகளுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டியுள்ளது. 
குறிப்பாக கடந்த 15ம் தேதி நடந்த தேர்வு தவிர, கடந்த மே மாதம் வரை நடத்தப்பட்டுள்ள 12 போட்டித் தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இதன் மூலம் தேர்வாணையம் மிகக் குறுகிய கால இடைவெளியில், அதிக அளவிலான அறிவிப்புகளை வெளியிட்டு அதற்கான போட்டி தேர்வை திறம்பட நடத்தி, மிகுந்த வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog