பகுதிநேர ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்




பகுதிநேர ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடப்பதால் தகுதியில்லாதவர்களை பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி மூலம் அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட கலைப்பாடங்களுக்கு, பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.


மொத்தம் 12 ஆயிரம் பேர் தற்போது பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு சமீபத்தில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.


 அப்போது போதிய கல்வித்தகுதி இல்லாதோர் பணியில் இருப்பது தெரியவந்துள்ளது.இதனால் மாவட்ட வாரியாக பகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க உத்தரவிடப்பட்டது.


முதற்கட்டமாக ராமநாதபுரம், ஈரோடு மாவட்டங்களில் தகுதி சான்றிதழ்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தகுதியில்லாதோர் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 


தமிழ்நாடு கலையாசிரியர் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி முடிக்காத 350 பேரின் விபரங்களை பெற்றுள்ளேன். 


இதை அடிப்படையாக வைத்து முதல்வர் தனிப்பிரிவுக்கு கடந்த டிச., மாதம் மனு அனுப்பினேன். மனு ஏற்கப்பட்டதாகவும், ஆய்வுக்கு உட்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியில்லாதோரை பணிநீக்கம் செய்யும் பட்சத்தில், அவர்களுக்கு பதிலாக தகுதியுள்ள பட்டதாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும், என்றார்.


Comments

Popular posts from this blog