16 July 2025

 TNPSC Group 4 தேர்வில் குளறுபடி - மறுதேர்வு நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் : சீமான்




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வுகள் கடந்த (ஜூலை 12) சனிக்கிழமை அன்று நடந்து முடிந்துள்ளது.


இந்த தேர்வில் சுமார் 11.48 லட்சம் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர். இந்தாண்டு வினாத்தாள் வழக்கத்தை விட கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தமிழ் மொழி தேர்வு செய்து தமிழ்வழியில் தேர்வு எழுதியவர்களுக்கு தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக பரவலாக பலரும் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், டி.என்.பிஎஸ்.சி. குரூப் - 4 தேர்வில் நடந்த குளறுபடியால், அதை ரத்து செய்து மறுதேர்வு நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 


இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி - 4 (GROUP 4) தேர்வு வினாத்தாளில் தமிழ்மொழி குறித்த பெரும்பாலான கேள்விகள் தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால், மிகக்கடினமான கேள்விகளாக இடம்பெற்றதால் தேர்வர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து அலட்சியமாகச் செயல்பட்டு தேர்வர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவது வன்மையான கண்டனத்திற்குரியது.


தமிழ்நாடு அரசில் 3,395 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தொகுதி-4 தேர்வினை ஏறத்தாழ 11 லட்சம் 50 ஆயிரம் தேர்வர்கள் எழுதியுள்ள நிலையில், வினாத்தாளில் ஆங்கிலமொழிப் பகுதி வினாக்கள் எளிதாகவும், தமிழ்மொழிப்பகுதி வினாக்கள் மிகக்கடினமானவும் இருந்ததால் தேர்வர்கள் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக தமிழ்மொழிப் பகுதியில் பண்டைய ஓலைச்சுவடிகளில் இருந்தெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூடத் தேர்ச்சி அடைய முடியாத அளவிற்கு கடினமான வினாக்கள் தமிழ்மொழி பகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில், ஆங்கிலப் பகுதி வினாக்கள் எளிதானதாக இடம்பெற்றுள்ளது தேர்வின் சமநிலையை முற்றாகச் சீர்குலைத்துள்ளது.


இதனால் அரசு வேலை கனவோடு இராப்பகலாகக் கண்துஞ்சாது படித்து, கடின உழைப்பினை செலுத்திய தமிழிளம் தலைமுறை பிள்ளைகளின் எதிர்காலம் இருளாகி, மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுதான் திராவிட மாடல் திமுக அரசு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கும் முறையா? இதுதான் தமிழ் மொழிக்கு அளிக்கும் முக்கியத்துவமா?


இதன் மூலம் தமிழ்வழியில் பயின்ற தேர்வர்களைப் போட்டியிலிருந்தே வெளியேற்றும் சூழ்ச்சி வெட்டவெளிச்சமாகியுள்ளது. அரசுப் பணியாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகளை செய்வதற்காகவே தொகுதி-4 தேர்வில் பாடத்திட்டத்திற்கு அப்பாலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு, தமிழ்மொழி வினாக்கள் மிகக்கடினமானதாக வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.


ஆகவே, தொகுதி-4 (GROUP-4) தேர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசே பொறுப்பேற்று, தேர்வின் சமநிலை மற்றும் நடுநிலைத்தன்மையைக் காக்கும் பொருட்டு, நடந்து முடிந்த தொகுதி-4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, விரைவில் மறுதேர்வு நடத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். 


மேலும், எதிர்காலத்தில் எந்தவொரு அரசுப்பணியாளர் தேர்விலும் இதுபோன்ற குளறுபடிகள் மீண்டும் ஏற்படா வண்ணம் மிகக்கவனமாகச் செயலாற்ற வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தைக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...