பள்ளி கல்வித்துறையின் விஷன் 2024: அரசு பள்ளிகளில்100% தேர்ச்சி-25-11-2012 சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் , 2024 ம் ஆண்டில் , 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவதற்கு , பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது . அரசு , தனியார் , உதவிபெறும் பள்ளிகள் என , ஒட்டுமொத்தமாக , 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன . இவற்றில் , 1.35 கோடி மாணவ , மாணவியர் படிக்கின்றனர் . 5.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் . பல ஆண்டுகளாக இருந்து வந்த கல்விமுறை , முந்தைய தி . மு . க ., ஆட்சியில் மாற்றப்பட்டு , சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது . அ . தி . மு . க ., அரசு , இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தி , 1 முதல் 8 ம் வகுப்பு வரை , முப்பருவ கல்வி முறை திட்டத்தையும் , தொடர் மதிப்பீட்டு முறை திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது . கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் , பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன . எனினும் , பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் , தொடர்ந்து ஒரே அளவில் இருந்து வருகிறது . பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம் , 85 முதல் , 87 வரை இருந்து வருகிறது . இதிலும் , தனியார் பள்ளி மாணவ , மாணவியரின் தேர்ச்சி கணிசமாகவும் , அரசுப் பள்ளி மாணவ , மாணவியரின் தேர்ச்சி குறைவாகவும் உள்ளது . மேலும் , தென் மாவட்டங்கள் , கல்வி தரத்தில் உயர்ந்தும் , வடமாவட்டங்கள் தாழ்வான நிலையிலும் உள்ளன . இந்த முரண்பாடுகள் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து , கடந்த பொதுத்தேர்வு தேர்ச்சியின் அடிப்படையில் , பள்ளிக் கல்வித்துறை , விவரமாக ஆய்வு நடத்தி உள்ளது . ஒட்டுமொத்த தேர்ச்சியில் , அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைவதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில் , தேர்ச்சி குறைந்த அனைத்துப் பள்ளிகளிலும் , ஆசிரியர் பற்றாக்குறை அல்லது ஏற்கனவே உள்ள பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது தெரிய வந்துள்ளது . பிளஸ் 2 தேர்ச்சி குறித்த ஆய்வு விவரம் , தற்போது தெரியவந்துள்ளது . அதன்படி , கணிதப் பாடத்தில் , 10.8 சதவீதம் பேரும் , வணிகவியல் பாடத்தில் , 8.9 சதவீதம் பேரும் தோல்வி அடைந்துள்ளனர் . பாட வாரியாக , அரசுப் பள்ளி மாணவர்கள் அடைந்துள்ள தோல்வி குறித்து , கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது . தமிழ் , ஆங்கிலப் பாடத்தில் தான் , மிகக் குறைவான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர் . தமிழில் , 0.8 சதவீதம் பேரும் , ஆங்கிலத்தில் , 2.20 சதவீதம் பேரும் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர் . கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும் , மிகக் குறைவாக , 0.8 சதவீத மாணவர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர் . 2,243 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பெண்கள் , 682. அரசுப் பள்ளி மாணவர்களில் , 77 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர் . அதுவே , தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் , 93.6 ஆக உள்ளது . இது குறித்து , பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது : அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும் , முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது , இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது . அரசு எடுத்துவரும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளால் , அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து வருகிறது . கடந்த பிளஸ் 2 தேர்வில் , 325 அரசுப் பள்ளிகள் , தனியார் பள்ளிகளை மிஞ்சி , 93.6 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன . தேர்ச்சி சதவீத முரண்பாடுகளை களைந்து , 2024 ம் ஆண்டு பொதுத்தேர்வில் , 100 சதவீத தேர்ச்சி மற்றும் கல்வி தரத்தில் , சரிசமமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என , இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . அதற்கேற்ப , சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன . அதன்படி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு , காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள் , வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும் . மாணவர்கள் பாதிப்பை தவிர்க்க , தற்காலிகமாக , பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் , ஆசிரியரை நியமித்துக்கொள்ள , பள்ளி நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . திறமையான ஆசிரியர் பயிற்றுனர்களை , ஆசிரியர் பணிக்கு மாறுதல் செய்யவும் திட்டமிட்டுள்ளோம் . 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி குறைந்த அரசுப் பள்ளிகளில் , பொதுத்தேர்வு எழுதும் மாணவ , மாணவியருக்கு , தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது உடன் , பாட நிபுணர்களின் , வழிகாட்டுதல்களும் அளிக்கப்படும் . இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் , இலக்கை எட்ட முடியும் என , நம்புகிறோம் . இவ்வாறு , கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன

Comments

Popular posts from this blog