அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தாவல் சோகம்!

தவிப்புக்கு உள்ளாகும் தனியார் பள்ளிகள் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்த 300க்கும் மேற்பட்ட, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு பள்ளி ஆசிரியர்களாகி உள்ளனர். இதன் காரணமாக, தனியார் பள்ளிகளில் முக்கிய பாடங்களை நடத்த ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

அரையாண்டு தேர்வு நடந்து வரும் இத்தருணத்தில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீரென வெளியேறியுள்ளது, மாணவர்களின் கல்வியை வெகுவாக பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டு, மாநிலம் முழுவதும் 18 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு முடிவு, கடந்த4ம் தேதி வெளியிடப்பட்டது. 

தேர்வு செய்யப்பட்டுள்ள 18 ஆயிரம் ஆசிரியர் களுக்கும் வரும் 13ல் பணி நியமனம் வழங்கப்படுகிறது. இதற்காக, மாநிலம் முழுவதும் தேர்வான ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் மூலமாக, பணி நியமன கலந்தாய்வு நடந்து வருகிறது. கடந்த இரு நாட்களாக, பட்டதாரி ஆசிரியர் களுக்கான கலந்தாய்வு நடந்தது; 

இன்று, இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்த 400 இடைநிலை ஆசிரியர்களும், பி.எட்., முடித்த 219 பட்டதாரி ஆசிரியர்களும், அரசு ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். அவர்களது விருப்பத்தின் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்திலோ அல்லது வெளிமாவட்டங்களிலோ பணி அமர்த்தப்பட உள்ளனர்.தனியார் பள்ளிகளுக்கு சிக்கல்திருப்பூர் மாவட்டத்தில், தனியார் பள்ளிகளில் பணியாற்றிய இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும், டி.இ.டி., தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள், அரசு பள்ளி ஆசிரியர்களாக தேர்வாகியுள்ளனர். 

அதனால், தனியார் பள்ளிகளில், அவர்களது பணியிடம் திடீரென காலியாகி உள்ளது.தனியார் பள்ளிகள் சிலவற்றில் அரையாண்டு தேர்வு துவங்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த அனுபவமிக்க ஆசிரியர்கள், திடீரென அரசு பள்ளிக்கு தாவியுள்ளதால், மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில், தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்களை பணியில் சேர்க்க, தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டினாலும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கிடைப்பதில்தட்டுப்பாடு நிலவுகிறது.

 பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், முழு ஆண்டுக்கு உரிய "சிலபஸ்' முடிப்பதும், பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறுவதும், ஆசிரியர்கள் தட்டுப்பாட்டால், தனியார் பள்ளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆசிரியர்கள் வெளியேறுவதால், தேர்ச்சி விகிதம் நிச்சயமாக குறையும் என்ற அச்சத்தில், தனியார் பள்ளி நிர்வாகிகள் கவலை அடைந்துள்ளனர்.

தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறுகையில்,"சில பள்ளிகளில் இருந்து ஐந்து பேர் வரை, அரசு ஆசிரியர்களாக தேர்வாகி வெளியேறியுள்ளனர்.ஆசிரியர் பற்றாக்குறையால், பாடங்களை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக பணிக்கு வரும் ஆசிரியர்கள், பாடங்களை நடத்துவதிலும், மாணவர்களை புரிந்துகொள்வதிலும் சிரமம் உள்ளது. பொதுத் தேர்வுக்கு பின், மே மாதத்தில், பணியிட நியமனத்தை அரசு செய்திருந்தால், தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்காது,' என்றனர்.

மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக இருந்த 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள், ஒரே நேரத்தில் பூர்த்தி செய்யப் படுவதால், மாணவர்களில் கல்வி நலன் மேலோங்கவாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆயிரக்கணக்கான பணியிடங்கள், தனியார் பள்ளிகளில் திடீரென காலியாகியுள்ளது. இது,அப் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும்."

Comments

Popular posts from this blog