1200 பணி இடங்கள் காலி:கணினி அறிவியலை பிற ஆசிரியர்கள் நடத்திவரும் அவலம்,பொதுத் தேர்வு மாணவர்கள் தவிப்பு.

 தமிழகத்தில், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், கணினி அறிவியல் ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளதால், பிற பாட ஆசிரியர்கள், அப்பாடத்தை நடத்தி வருகின்றனர். இதனால், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் கீழ், ஆண்டுதோறும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.

 2001 முதல், 2012 வரை, தமிழகம் முழுவதும், 1,200 பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. இவற்றில், கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், 1,200 பணியிடங்கள் காலியாக உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியின் மூலமாக, குறைந்த சம்பளத்துக்கு, கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பல பள்ளிகளில், பிற பாடங்களை எடுக்கும் ஆசிரியர்கள், கணினி அறிவியல் பாட வகுப்புகளை நடத்துகின்றனர். 

இதனால், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இப்பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம்உள்ளது. தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலர், விஜயகுமார் கூறியதாவது: கடந்த, எட்டு ஆண்டுகளில், 1,200 பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. 

இவற்றில், 2002-10 வரை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், முதலில் ஐந்து முதுகலை ஆசிரியர்களுக்கும், பின், ஒன்பது ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்கப்பட்டன. ஆனால், கணினி அறிவியல் பாடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கவில்லை. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், 2008-09ல், 2,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதிலும், கணினி அறிவியல் ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை.

இப்பாடத்துடன், காலியாக உள்ள பிற பாட ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், "கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள், பணி நியமனம் சார்ந்தவழக்கு நிலுவையில் இருப்பதே, இதற்கு காரணமாக இருக்கலாம். இதுசார்ந்த வேறு எவ்வித தகவல்களும், எங்களால் தெரிவிக்க இயலாது' என்றனர்.

Comments

Popular posts from this blog