ஆசிரியர் நியமனத்தில் ஊழல்

புதுடில்லி: ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்த வழக்கில், அரியானா முன்னாள் முதல்வர், ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன், அஜய் சிங் சவுதாலா உள்ளிட்ட, 55 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சவுதாலா உள்ளிட்ட, 55 பேரும், நேற்று கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்திய தேசிய லோக்தளம் கட்சியை சேர்ந்தவர், ஓம்பிரகாஷ் சவுதாலா, 78. இவர், 2000ல், அரியானா முதல்வராக பதவி வகித்தபோது, மாநில கல்வித் துறை சார்பில், 3,206 பணியிடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இதில், ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சி.பி.ஐ., விசாரித்தது. லஞ்சம் பெற்று, பணி நியமனம் செய்ததாகவும், போலியான ஆவணங்களைத் தயாரித்ததாகவும், ஓம் பிரகாஷ் சவுதாலா; அவரது மகனும், இந்திய தேசிய லோக்தளம் கட்சி எம்.எல்.ஏ.,வுமான, அஜய் சிங் சவுதாலா; அப்போதைய, ஆரம்ப கல்வித் துறை இயக்குனர், சஞ்சீவ் குமார்; சவுதாலாவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய, வித்யாதர் மற்றும் அதிகாரிகள் உட்பட, 62 பேர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள், 2008ல், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இவர்கள் மீது, லஞ்சம் வாங்கியது, மோசடி, சதித் திட்டம், போலியான ஆவணங்களைத் தயாரித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், ஆறு பேர், விசாரணையின் போதே இறந்து விட்டனர். ஒருவர், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்; மீதமுள்ள, 55 பேர் மீதும், விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.சிறப்பு கோர்ட் நீதிபதி, வினோத் குமார், 308 பக்கங்களைக் கொண்ட, தீர்ப்பை வாசித்தார்.
தீர்ப்பு விவரம்:
சவுதாலா, முதல்வராக பதவி வகித்தபோது நியமிக்கப்பட்ட, 3,206 ஆசிரியர் பணியிடங்களும், சட்ட விரோதமாக நடந்துள்ளது. இந்த ஒட்டு மொத்த ஊழலுக்கும், அப்போதைய முதல்வரசவுதாலா தான், காரணமாக இருந்துள்ளார். அவரது உத்தரவுப்படி தான், இந்த ஊழல் நடந்துள்ளது.எனவே, இந்த வழக்கின் பிரதான குற்றவாளி, ஓம்பிரகாஷ் சவுதாலா தான். இந்த ஊழல், தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்குமே, இந்த ஊழலில் தொடர்புள்ளது. இந்த ஊழல் தொடர்பாக, முதலில் புகார் அளித்தவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சஞ்சீவ் குமார். சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், ஊழலில், இவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால், இவரும் குற்றவாளியாகிறார்.எனவே, குற்றவாளிகள், 55 பேரையும், உடனடியாக கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்த வாதம், இன்றும், 19 மற்றும் 21ம் தேதிகளிலும் நடக்கும். தண்டனை விவரம், 22ம் தேதி அறிவிக்கப்படும்.இவ்வாறு நீதிபதி, தன் தீர்ப்பில் தெரிவித்தார்.கோர்ட் உத்தரவையடுத்து, ஓம்பிரகாஷ் சவுதாலா, அவர் மகன் அஜய் சிங் சவுதாலா உள்ளிட்ட, 55 பேரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டனர்.நேற்று தீர்ப்பு வெளியானதை அடுத்து, கோர்ட் வளாகத்தில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குற்றவாளிகள், கோர்ட் ஊழியர்கள், வழக்கறிஞர்கள் தவிர, மற்ற யாரும் கோர்ட் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை." ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைகளின்போது, ஏற்கனவே, மது கோடா போன்ற முன்னாள் முதல்வர்கள் சிலர், சிறைவாசம் அனுபவித்துள்ளனர். ஆனாலும், ஊழல் வழக்கு ஒன்றில், தீர்ப்புக்கு பின் சிறைக்கு செல்லும், முதல் முன்னாள் முதல்வர்,சவுதாலா தான்' என, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.தேர்தலில் போட்டியிட முடியாதுஊழல் வழக்கில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. ஊழல் வழக்கில், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை பெற்றால், ஆறு ஆண்டுகளுக்கு, எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது. ஓம்பிரகாஷ் சவுதாலாவின் அரசியல் வாரிசான, அஜய் சவுதாலாவும், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவருக்கும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஓம்பிரகாஷ் சவுதாலா, அரியானாவில் செல்வாக்கு மிக்க தலைவர். தற்போது, இந்த வழக்கில் சிக்கியுள்ளதால், அவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. ஆனாலும், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, மேல் கோர்ட்டுகளில், முறையீடு செய்ய, அவருக்கு வாய்ப்புள்ளது

Comments

Popular posts from this blog