ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு: மார்க்சிஸ்ட் கோரிக்கை 

 தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 

இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்குதகுதித் தேர்வு மதிப்பெண்களில் 5 சதவீதம் வரை தளர்த்த வேண்டும் என ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தெரிவித்துள்ளது. 

ஆந்திரம், அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 முதல் 20 சதவீதம் வரைதகுதித் தேர்வு மதிப்பெண்கள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் மதிப்பெண்கள் தளர்த்தப்படாததால் இட ஒதுக்கீட்டால் பயன்பெறுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

69 சதவீத இடஒதுக்கீடு தவிர மீதமுள்ள 31 சதவீதம் என்பது இட ஒதுக்கீட்டால் பயன் அடைவோர் உள்பட அனைவருக்கும் உரியது. ஆனால், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பொதுப்பிரிவு என்பது இட ஒதுக்கீட்டால் பயன் அடையாதவர்களுக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டுள்ளது. 

உதாரணமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் முதலிடம் பெற்றவரின் மதிப்பெண் 122. பொதுப்பட்டியலில் முதலிடம் பெற்றவரின் மதிப்பெண் 116. இவ்வாறு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு மாறாகவும், சமூக நீதியை மறுக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. வரும்ஜூலையில் நடைபெறவுள்ள தகுதித் தேர்வில் கடந்த ஆண்டில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தகுதித் தேர்வு மதிப்பெண்களில் தேவையான சதவீதம் தளர்த்த வேண்டும் என ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Comments

Popular posts from this blog