ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் டி.இ.டி., தேர்வுகள்: டி.ஆர்.பி., அறிவிப்பு

சென்னை: "ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கும்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. மூன்றாவது முறையாக நடக்கும் இத்தேர்வை, ஏழு லட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் எழுதுவர் என, எதிர்பார்ப்பதால், 15 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து வினியோகிக்க, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. 

அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது, இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் விதி. அதன்படி, கடந்த ஆண்டு, ஜூலை மற்றும் அக்டோபரில், இரண்டு, டி.இ.டி., தேர்வுகளை, டி.ஆர்.பி., நடத்தியது. 

முதல்தேர்வில், வெறும், 2,448 பேர் தேர்ச்சிபெற்றனர். குறைவான நேரம், கடினமான வினாத்தாள் ஆகியவற்றால், தேர்வர்கள் திணறினர். இதனால், அக்டோபரில் நடத்திய மறுதேர்வில், தேர்வு நேரத்தை, ஒன்றரை மணி நேரத்தில் இருந்து, 3 மணி நேரமாக அதிகரித்ததுடன், கேள்வித்தாள், சராசரி அளவில் இருக்கும் வகையில், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது. இதனால், அந்த தேர்வில், 19 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். 

எனினும், இன்னும், 17 ஆயிரம் இடங்கள், அரசு பள்ளிகளில் காலியாக உள்ளன. தேர்வு தேதிகள் : இந்த பணியிடங்களை நிரப்ப, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. 

அதன்படி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான, டி.இ.டி., முதல் தாள்தேர்வு, ஆகஸ்ட், 17ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, ஆகஸ்ட், 18ம் தேதியும் நடக்கின்றன. இரு தேர்வுகளும், காலை, 10:00 மணி முதல், நண்பகல், 1:00 மணி வரை நடக்கும். மாநிலம் முழுவதும், 66 கல்வி மாவட்ட தலைநகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. 

ஜூன் 17ல் விண்ணப்பம் : வரும், ஜூன், 17ம் தேதி, காலை, 10:00 மணி முதல், ஜூலை, 1ம் தேதி, மாலை, 5:30 மணி வரை, அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், விண்ணப்பங்கள் வழங்கப் படும். 50 ரூபாய் கொடுத்து, விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவு தேர்வர்கள், மற்றும் மாற்றுத் திறனாளிகள், 250 ரூபாயும், இதர பிரிவு தேர்வர்கள், 500 ரூபாயும், தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். 15லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கனவே நடந்த, டி.இ.டி., தேர்வை, ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். அதேபோல், இந்த முறையும், ஏழு லட்சம் முதல், எட்டு லட்சம் பேர் வரை எழுதலாம்என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது.எனவே, 15 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து, அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அனுப்ப, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. 


தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் : ஆசிரியர் கல்விக்கான தேசிய குழுவின் (என்.சி.டி.இ.,) அறிவிக்கை நாள், 23.8.2010க்குப் பின், அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும், பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் அனைவரும், டி.இ.டி., தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேதிக்குப் பின், பணி நியமனம் பெற்றிருந்தாலும், பணி நியமன நடவடிக்கைகள், மேற்கண்ட தேதிக்கு முன்துவங்கியிருந்தால், அவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை. குறிப்பிட்ட தேதிக்குப் பின், பணி நியமன வேலைகள் துவங்கி, வேலையில் சேர்ந்திருந்தால், சம்பந்தப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆர்.டி.இ., விதிப்படி, ஐந்து ஆண்டுகளுக்குள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். 

நடப்பு கல்வி ஆண்டில், ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதிக்கான இறுதி தேர்வை எழுதுபவர்களும், டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். டி.இ.டி., தேர்வில், குறைந்தபட்சம், 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெறும் தேர்வர்கள் மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். 

முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரு தேர்வுகளிலும், 150 கேள்விகள் இடம் பெறும். தலா ஒரு மதிப்பெண் வீதம், 150 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, "ஆன்-லைன்' வழியாகவோ, தபால் மூலமாகவோ, பேக்ஸ்மூலமாகவோ அனுப்பக் கூடாது. நேரடியாக அந்தந்த டி.இ.ஓ., அலுவலகங் களில் சமர்ப்பிக்க வேண்டும்.

 ஏற்கனவே, டி.இ.டி., தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுடைய தகுதி மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்ள விரும்பினால், அவர்களும், ஆகஸ்ட்மாதத்தில் நடக்கும் தேர்வை எழுதலாம்.

Comments

Popular posts from this blog