ஆசிரியர் பயிற்சி: ஆர்வம் காட்டாத மாணவர்கள் ஆசிரியர் பயிற்சி படிப்பில்சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. 

கடந்த, நான்கு நாட்களில், வெறும், 1,500 விண்ணப்பங்கள் மட்டும் விற்பனை ஆகியுள்ளன. இறுதி தேதிக்குள், 5,000 விண்ணப்பங்கள் விற்றால், பெரிய விஷயம் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 பிளஸ் 2 படிப்பிற்குப் பின், இரு ஆண்டு, ஆசிரியர் பட்டய பயிற்சியைபடித்தால், ஆரம்ப பள்ளிகளில், ஆசிரியர்களாக பணியாற்றலாம். தற்போதைய நிலையில், ஆசிரியர் பயிற்சியை படித்து, தேர்ச்சி பெற்றாலும், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். அப்படியே தேர்ச்சி பெற்றாலும்,பதிவு மூப்பு அடிப்படையில் தான், பணிநியமனம் நடக்கிறது. 

ஆசிரியர் பயிற்சி படிப்பு தேர்விலேயே, 30 முதல், 40 சதவீத மாணவர்கள் தான், தேர்ச்சி பெறுகின்றனர். இந்த நிலையில், டி.இ.டி., தேர்வு,இந்த மாணவர்களுக்கு, சவாலாகவே உள்ளது. இந்த சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றாலும், பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் என்பதால்,வேலை கிடைக்க, வயது, 50ஐ எட்ட வேண்டும். 

இதனால், எந்த வகையிலும், இந்த படிப்பு, மாணவர்களுக்கு, உபயோகமாக இல்லை. இதனால், இந்த படிப்பில் சேர,மாணவர்கள் மத்தியில், ஆர்வம் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன் வரை, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்,இந்த பயிற்சியை பெற முட்டி மோதினர். 

 அரசு ஒதுக்கீட்டின் கீழ்,20 ஆயிரம் இடங்கள் இருக்கின்றபோதும், கடந்த ஆண்டு, வெறும், 8,000 இடங்களே நிரம்பின. இந்த ஆண்டு, 4,000 முதல், 5,000 இடங்கள் நிரம்பினாலே பெரிய சாதனையாகஇருக்கும் என, ஆசிரியர் கல்வி பயிற்சித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 கடந்த, 27ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்கு நாட்களில், வெறும், 1,500 விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனை ஆகியிருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடைசி தேதியான, ஜூன், 12 வரை, மேலும், 3,500 விண்ணப்பங்கள் விற்பனை ஆகுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

 இந்த படிப்பு, மாணவர்கள் மத்தியில், போணி ஆகாததால், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், பி.எட்., கல்லூரிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, 50 பள்ளிகள் மூடப்பட்டன.இந்த ஆண்டும், கலந்தாய்வு துவங்குவதற்குள், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog