இடஒதுக்கீடு கொள்கைக்கு முக்கியத்துவம் தர ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண்களில் மாற்றம் தேவை சென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி, பதில்கள் அறிக்கை: ஆகஸ்ட் 17, 18 தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்துள்ளதே? 3ம் முறையாக இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் 7 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் தேர்வு எழுதுவர் என்று எதிர்பார்ப்பதால், 15 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து விநியோகிக்க போவதாகவும் தெரிகிறது. அனைத்து வகை பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பது, இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின்படியான விதியாகும். அரசு பள்ளிகளில் சுமார் 23,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காககடந்த ஆண்டு, ஜூலை மற்றும் அக்டோபரில் ஆசிரியர் தகுதித் தேர்வை 2 முறை தேர்வு வாரியம் நடத்தியது. முதலில் நடைபெற்ற தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் அக்டோபரில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரித்ததுடன், கேள்வித்தாள் கடினமாகஇல்லாத அளவில் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஏறத்தாழ 6.5 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில், 10,397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு பெற்றனர். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை அடுத்த தகுதித் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படிதான் தற்போது அந்த தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஆகஸ்ட் 17ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 18ம்தேதியும் நடக்கவுள்ளன. தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெற வேண்டும், அதாவது 60சதவீதம். 2 முறை ஏற்கனவே நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டு பிரிவினருக்காவது சலுகை வழங்கப்படும்என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. தேர்ச்சிபெற அனைத்து பிரிவினருமே 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றுதான் வைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர், உயர் வகுப்பினரை போலவே 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பது தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமானதாகும். ஆந்திராவில் உயர் சாதியினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவீதம் மதிப்பெண்கள் என்றும், அஸ்ஸாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 என்றும், ஒடிசாவில்உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 50 சதவீதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அதிமுக அரசு அனைத்து பிரிவினருக்கும் 60 சதவீதம் மதிப்பெண் என்று நிர்ணயித்துள்ளது என்பது, பெரியாரின் சமூகநீதி கொள்கைக்கு எதிரானதும், இடஒதுக்கீட்டு கொள்கைக்கு விரோதமானதுமாகும். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை ஆகஸ்ட்டில் நடத்தப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, இந்த முறையாவது இடஒதுக்கீட்டு கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து, தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்ய முன் வரவேண்டும்.

Comments

Popular posts from this blog