தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் வெளியாகாததால் குழப்பம்

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியலை, வெளியிட தாமதம் ஆவதால், பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு டி.சி., கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றன. 

தமிழகத்தில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக, இந்த ஆண்டு, தரம் உயர்த்தப்படுகின்றன. 50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும், பள்ளிகள் இல்லாத இடங்களில், புதிதாக, 54 துவக்கப் பள்ளிகள் துவக்கவும் அரசு முடிவு செய்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், அவை எந்த பள்ளிகள் என்ற விவரத்தை, அரசு இன்னும் அறிவிக்கவில்லை. 

பள்ளிகளை திறக்கும்நாள் நெருங்கி வருகிறது. அனைத்து பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியலை, பள்ளிக்கல்வித் துறை இன்னும் வெளியிடவில்லை. இதனால், தங்களது பள்ளி தரம் உயர்த்தப்பட்டுள்ளதா என, தெரியாமல் ஆசிரியர்களும் மாணவர்களும் தவித்து வருகின்றனர். 

குறிப்பாக, தரம் உயர்வைஎதிர்பார்த்து காத்திருக்கும் நடுநிலைப் பள்ளிகள், தற்போது எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, டி.சி., கொடுப்பதா, வேண்டாமா என, தவித்து வருகின்றன. மாணவர்களை அனுப்பிய பின், தரம் உயர்த்தப்பட்ட அறிவிப்பு வெளியானால், புதிதாக துவங்கும் வகுப்புகளில், மாணவர்களை சேர்ப்பது சிரமம் ஆகிவிடும்.

 இதற்கு தீர்வு காண, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள், புதிதாக பள்ளிகள் துவங்கும் இடம் பற்றிய பட்டியல் போன்றவற்றை, பள்ளிக்கல்வித் துறை உடனடியாக, வெளியிட வேண்டும் என, அரசு பள்ளி நிர்வாகங்கள் எதிர்பார்க்கின்றன.

Comments

Popular posts from this blog