புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: இடஒதுக்கீடு முறையை பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டு 

சென்னை அரசு கல்லூரி முன்னாள் முதல்வர்கள் ப.சிவகுமார், மு.திருமாவளவன் மற்றும்முன்னாள் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் இணைந்து சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். 

அப்போது அவர்கள் கூறியதாவது:– தேசிய ஆசிரியர் கல்வி கழக நெறிமுறைகளின் 9–ம் விதிப்படி, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்ற வேண்டும். ஆனால் சென்ற ஆண்டு தமிழக அரசு நடத்திய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்காமல் 19 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

 இடஒதுக்கீட்டை முறையாக கடைபிடித்திருந்தால் கூடுதலாக 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேலை கிடைத்து இருக்கும். எனவே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 19 ஆயிரம் ஆசிரியர்களின் பணி நியமனத்தை உடனடியாக ரத்து செய்து, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் புதிதாக பணி நியமனம் நடத்த வேண்டும்.

இடஒதுக்கீடு விதிமுறைகளின்படி, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தை நடத்தாத, தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்ரியை பணி நீக்கம் செய்து, அவர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Comments

Popular posts from this blog