டி.இ.டி., பயிற்சி மையங்களுக்குகட்டுப்பாடு தேவை: கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை - தினமலர் செய்தி

தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு குரூப், 2 வினாத்தாள் அவுட்டானது. இந்தாண்டு, டி.இ.டி., தேர்வு வினாத்தாள் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பான பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடும், கண்காணிப்பும் அவசியம் என கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டாக ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வுக்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என்ற அடிப்படையில் தேர்வு நடத்தப்படுகிறது.

ஆனால், குறுக்கு வழியில் ஆசிரியர் பணிக்கு செல்ல முயல்வோரும், தகுதியில்லாதவர்களும், குறுக்கு வழியில் ஆசிரியராகி விட வேண்டும் என்ற அடிப்டையில், தேர்வு வினாத்தாள்களை பல லட்சம் கொடுத்து வாங்க முன் வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இது போன்ற போக்கு அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு நடந்த குரூப் 2 தேர்வு வினாத்தாள் தர்மபுரி மற்றும் ஈரோட்டில் அவுட்டானது. கடந்த, 17ம் தேதி டி.இ.டி., தேர்வு வினாத்தாள் மோசடி நடந்திருப்பதாக தர்மபுரியில்,ஆறு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது.

தேர்வு வினாத்தாள்கள், 8 லட்ச ரூபாய்வரையில் பேரம் பேசப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தேதி அறிவிக்கும் முன்பே தர்மபுரி மாவட்டத்தில் பலரும் பயிற்சி மையங்களை துவங்கி, நடத்த துவங்கியதோடு, மாதிரி தேர்வு, மாதிரிவினாத்தாள் என கொடுத்து தேர்வு எழுதுவோர்களை தயார்படுத்துவது போல் காட்டி கொள்கின்றனர்.

இந்த பயிற்சி மையங்களின் பின்னணியில் பெரும்பாலும் ஆசிரியர்கள் பலர் இருப்பதும், தங்கள் பயிற்சி மையத்தின் மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கையை அதிகம் காட்டுவதும் மூலம் வரும் ஆண்டுகளில் கூடுதல் மாணவர்களை சேர்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், பயிற்சி மையங்களும், தேர்வு வினாத்தாள்களை விலை கொடுத்துவாங்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பல பயிற்சி மையங்கள் இதை வியாபாரமாக செய்வதோடு, தேர்வு எழுதுவோர்களை கவரும் வகையில்பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சி மையங்கள் நடத்த எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையில், பயிற்சி மையங்கள் வியாபார நோக்கத்தில் துவங்கப்பட்டு, தேர்வு மோசடி உருவாகும் இடமாக மாறி வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில், டி.இ.டி., வினாத்தாள் மோசடி குறித்து ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருந்த போதும், ஆதாரத்தோடு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியாத நிலையுள்ளது.

மேலும், பணம் கொடுத்த பலர் இதை புகாராக கொடுத்தால், தாங்களும் வழக்கில் சிக்க நேரிடம் என்பதால், பணம் கொடுத்தவர்கள் அமைதியாக இருப்பதோடு, பணம் கொடுத்தவர்கள் வினாக்களை முன் கூட்டியே தெரிந்து கொண்டு தேர்ச்சி பெறும் சூழ்நிலையில் இருப்பதால், பணம் கொடுத்தவர்கள் அமைதியாக இருப்பதால்,மோசடி வழக்கில் சொற்ப பேர்களை மட்டுமே போலீசாரால் கைது செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம், பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதோடு, பயிற்சி மைங்களை கண்காணித்தால், இது போன்ற மோசடி, முறைகேடுகள் வரும் காலங்களில் நடப்பதை தடுக்க முடியும் என கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.

Comments

Popular posts from this blog