பி.எட் ..,தேர்வில் தோல்வியடைந்து பின் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வுச் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு

            பி.எட்., தேர்வில் தோல்வியடைந்து, பின் வெற்றி பெற்றவருக்கு, ஆசிரியர் தகுதி சான்றிதழ் வழங்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு, ஜூன் மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், வினோத்குமார் என்பவர் கலந்து கொண்டார். விளக்க குறிப்பேட்டின்படி, பி.எட்., அல்லது ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ இறுதி ஆண்டு தேர்வை எழுதுபவர்களும், ஆசிரியர் தகுதி தேர்வை எழுத முடியும்.

வினோத் குமாரைப் பொறுத்தவரை, பட்டப் படிப்பு முடித்த பின், பி.எட்., இரண்டாம் செமஸ்டர் தேர்வு எழுத இருந்தார். இதற்கிடையில், ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி, 93 மதிப்பெண் பெற்றார். 60 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால், அதாவது, 90 மதிப்பெண் பெற்றால், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கருதப்படுவர். 

வினோத்குமார், 93 மதிப்பெண் பெற்றதால், தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டார்; ஆனால், பி.எட்., தேர்வில், வினோத்குமார் வெற்றி பெறவில்லை. எனவே, கடந்த ஆண்டு, மே மாதம் நடந்த, பி.எட்., தேர்வில், வினோத்குமார் தேர்ச்சி பெறாததால், அவருக்கு ஆசிரியர் தகுதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. 

இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் வினோத்குமார், மனுத் தாக்கல் செய்தார். மனுவில், "கடந்த ஆண்டு, டிசம்பரில் நடந்த, பி.எட்., தேர்வில் வெற்றி பெற்று விட்டேன். அதனால், ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெற, உரிமைஉள்ளது. எனக்கு, தகுதி சான்றிதழ் வழங்கும்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டு உள்ளது.
 
மனுவை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.குமாரவேல், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர். 

நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:
கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட, விளக்க குறிப்பேட்டில், இதுபோன்ற சூழ்நிலைகளில் சான்றிதழ் வழங்குவது பற்றி, எந்த தகவலும் இல்லை; ஆனால், இந்த ஆண்டில் வெளியிடப்பட்ட, விளக்க குறிப்பேட்டில், பி.எட்., சான்றிதழை தாக்கல் செய்யும் பட்சத்தில், தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. 

எனவே, தகுதி தேர்வில் வெற்றி பெற்றதால், அதற்கான சான்றிதழை பெற, மனுதாரருக்கு உரிமை உள்ளது. பி.எட்., சான்றிதழ் சமர்ப்பிக்கும் பட்சத்தில், மனுதாரருக்கு ஆசிரியர் தகுதிக்கான சான்றிதழை, ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டு உள்ளார்.
நன்றி : தினமலர்

Comments

Popular posts from this blog