நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து, தேர்வு செய்யப்பட உள்ள, 15 ஆயிரம் பேர் நியமனத்துடன் சேர்த்து, இந்த, 3,500 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், ஒட்டுமொத்தமாக, 18,500 ஆசிரியர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். 

கடந்த கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் என, 15 ஆயிரம் பேர், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் குறித்த பட்டியலை, பள்ளி கல்வித்துறையும், தொடக்க கல்வித்துறையும், தமிழக அரசுக்கு அனுப்பியது. பள்ளி கல்வி இயக்குனர், 3,487 பணியிடங்களுக்கும், தொடக்க கல்வி இயக்குனர், 694 இடங்களுக்கும், அரசின் அனுமதி கோரி, பட்டியலை அனுப்பினர். 

இதை, அரசு ஆய்வு செய்து, 3,525 இடங்களை நிரப்ப அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது. கல்வித்துறை செயலர், சபிதா, 10ம் தேதி வெளியிட்ட அரசாணை விவரம்:
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 314; 
ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர், 380 பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப, அரசு அனுமதி அளிக்கிறது. 
மேலும், முதுகலை ஆசிரியர், 809;
 பட்டதாரி ஆசிரியர், 979; 
இடைநிலை ஆசிரியர், 887; 
சிறப்பு ஆசிரியர் (ஓவியம், இசை, தையல்), 156 
பணியிடங்கள் என, 3,525 பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில் நிரப்ப, சம்பந்தப்பட்ட துறைகள், நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களில், 71 பேர், முதுகலை ஆசிரியராகவும், 115 வட்டார வள மைய பயிற்றுனர், பட்டதாரி ஆசிரியராகவும், பணிமாற்றம் செய்யப்படுவர் எனவும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog