முதுநிலை தமிழாசிரியர் சான்று சரிபார்ப்பு இன்று தொடக்கம் 

அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை தமிழாசிரியர் பணியிடங்களில் புதியதாக ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்று சரிபார்ப்பு இன்றும் நாளையும் நடக்கிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு விழுப்புரத்திலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலூரிலும் சான்று சரிபார்ப்பு நடக்கிறது. 

 அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்துக்கான போட்டித் தேர்வு ஜூலை 21ம் தேதி நடந்தது. தமிழ் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 7ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழாசிரியர்கள் தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 11ம் தேதி வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில் தகுதியுள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

 இதையடுத்து ஒரு பதவிக்கு ஒருவர் வீதம் சான்று சரிபார்ப்பு நடத்துவதற்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 23ம் தேதி இணைய தளத்தில் வெளியிட்டது. இதையடுத்து அழைப்பு கடிதங்களையும் இணைய தளத்தில் வெளியானது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் தேர்வு எண்ணை பதிவு செய்து இணைய தளத்தில் இருந்து அழைப்புக் கடிதங்கள் மற்றும் கவுன்சலிங்கில் பங்கேற்கும் போது பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய படிவங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேலும் சான்று சரிபார்ப்பின் போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வெயிட்டேஜ் மதிப்பெண் உள்ளிட்ட மதிப்பீடுகளுக்கு பிறகு இறுதி தெரிவு பட்டியல் வெளியிடப்படும். முதுநிலை பட்டதாரி தமிழாசிரியர்களுக்கான தேர்வை 32,000 பேர் எழுதினர். 

தற்போது மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 602 இடங்களில் மேற்கண்ட தமிழாசிரியர்களை நியமிக்க 649 பேர் சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். டிஆர்பி நடத்தும் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கான சான்று சரிபார்ப்பு பெரும்பாலும் சென்னையில்தான் நடப்பது வழக்கம். ஆனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் வெளி மாவட்டங்களில் இப்போது சான்று சரிபார்ப்பு நடக்கிறது.

Comments

Popular posts from this blog