முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கு 605 பேரை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்து அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து எழுத்து தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. 

 அதன் காரணமாக போட்டித்தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த வருடம் ஜூலை மாதம் 21-ந் தேதி நடத்தப்பட்டது. 421 மையங்களில் 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் எழுதினார்கள். இதில் தமிழ் பாடத்துக்கு உரிய தேர்வில் 44 கேள்விகளில் அச்சுப்பிழை இருப்பதாக பிரச்சினை எழுந்தது. அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றதால் தமிழ்பாடம் தவிர மற்ற பாடங்களுக்கு உரிய தேர்வு முடிவு முதலில் வெளியிடப்பட்டது. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. தமிழ் பாடத்திற்கு உரிய தேர்வு முடிவு வெளியிடப்பட்டு கடந்த 30 மற்றும் 31 தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. 

நேற்று ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 3 நாட்கள் தான் ஆகிறது. மொத்தம் 605 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் விவரம் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான ஆணையை பள்ளி கல்வித்துறை வழங்க உள்ளது.

Comments

Popular posts from this blog