ஆசிரியர் தகுதித்தேர்வில் உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: ராமதாஸ்

ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் உடனடியாக இட ஒதுக்கீட்டு விதிகளை நடைமுறைப்படுத்தி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலான ஆசிரியர் நியமன முறையை ரத்து செய்து அதற்கு மாற்றாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்படையிலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு அடிப்படையிலும் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. 

தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு மறுப்பு, போட்டித்தேர்வில் வினாத்தாள் குளறுபடிகள், ஆசிரியர்கள் நியமனத்தின்போது பொதுப்பிரிவில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு மறுப்பு என பல்வேறு குளறுபடிகள் அரங்கேறின. புதிய நடைமுறையால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அரசு பள்ளி ஆசிரியராகும் வாய்ப்பை இழந்து, தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். 

தமிழக அரசின் இந்த சமூக அநீதி குறித்து அளிக்கப்பட்ட புகார்களை விசாரித்த மத்தியச் சமூகநீதி அமைச்சகம், தமிழக அரசின் இந்தக் கொள்கை தன்னிச்சையானது; நியாயமற்றது; சட்டவிரோதமானது; இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து நிர்ணயிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் ஆணையிட்டுள்ளது. 

ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. மத்தியச் சமூக நீதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீட்டு விதிகளை நடைமுறைப்படுத்தி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து நிர்ணயிக்க வேண்டும். 

அதுமட்டுமின்றி, ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளுக்கும் இதே முறையை பின்பற்றி, குறைக்கப்பட்ட மதிப்பெண்களைப் பெற்றவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அவர்களைக் கொண்டு, கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பின்னடைவு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Comments

Popular posts from this blog