வங்கி துறையில் ஓய்வு பெறுவோர் அதிகரிப்பு : 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு-Dinakaran 

 புதிய வங்கி கிளைகள் திறக்கப்படுவதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்த துறையில் வரும் ஆண்டுகளில் 50 சதவீதம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதனால், 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

புதிய வங்கிகள் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி மற்றும் வங்கி சேவையை புறநகர், கிராம பகுதிகளுக்கும் விரிவு படுத்தும் முயற்சிகள் மூலம் இந்த துறையில் வேலை வாய்ப்பு பெருகியுள்ளது. மனித வளம் தொடர்பான ஆலோசனை மற்றும் சேவையில் உலகில் 2வது இடத்தில் இருக்கும் ராண்ட்ஸ்டன் இந்தியா, ‘2014ம் ஆண்டில் வங்கிகளில் வேலை வாய்ப்பு மற்ற துறைகளை விட அதிகமாக இருக்கும். இந்த துறையில் சுமார் 7 முதல் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த துறையில் இடைநிலை மற்றும் கீழ் மட்டத்தில் உள்ளவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் ஓய்வு வயதை எட்டியுள்ளதால், இந்த வகையில் மட்டும் 5 முதல் 7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகலாம் என இந்த நிறுவனம் கூறியுள்ளது. இதுபோல், வங்கி சேவை விரிவாக்கப்படுவதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 18 முதல் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என கணித்துள்ளது. 

மணிபால் அகாடமி ஆஃப் பாங்கிங், ‘இந்த துறையில் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’ என தெரிவித்துள்ளது.இதுதவிர, புதிதாக வங்கி தொடங்குவதற்கு அனுமதி வழங்கும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். 

கடந்த ஆண்டில் மட்டும் 4 லட்சம் பேர் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வேலைக்காக விண்ணப்பம் செய்துள்ளதாக ஒரு தனியார் நிறுவன புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்களில் பொதுத்துறை வங்கிகளில் சுமார் 60 ஆயிரம் பேருக்கும், தனியார் வங்கிகளில் சுமார் 40 ஆயிரம் பேருக்கும் வேலை கிடைத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

Comments

Popular posts from this blog