டெட்- தேர்வில் கூடுதல் தேர்ச்சி: நாளொன்றுக்கு 1,500 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு. 

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை மூலம் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 12 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. ஒரு மையத்துக்கு 300 பேர் வீதம் நாளொன்றுக்கு 1,500 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90) மதிப்பெண் எடுத்து 29 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தத் தேர்வில் கூடுதலாக 46 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற நிலையில், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஏற்பாடுகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது: பிளஸ் 2,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வுப் பணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பொதுத்தேர்வுநடைபெறாத 5 பள்ளிகள் சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.தேர்வுப் பணிகளில் ஈடுபடாத ஆசிரியர்களைக் கொண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டியுள்ளதால், 30 நாள்களுக்கும் மேல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பில் 200 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம், சுய விவர குறிப்புப் படிவம் மற்றும் அடையாள சான்றிதழ் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சரிபார்ப்பு மையங்கள் தொடர்பான விவரங்களும் இதில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் இவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். 

பூர்த்திசெய்யப்பட்ட இந்தப் படிவங்களோடு, அசல் சான்றிதழ்கள், அவற்றின் 2 நகல்களோடு சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களுக்கு வர வேண்டும்.சான்றிதழ் நகல்களில் அரசிதழில் பதிவு பெற்ற ஏதேனும் ஒரு அதிகாரியிடம் "கெசடட் ஆபீசர்' சான்றொப்பம் பெற வேண்டும்.இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்காக தனியாக அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படாது என அவர்கள் தெரிவித்தனர். 

சரிபார்ப்பு மண்டல மையங்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் இடம்பெறும் மாவட்டங்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் மையங்களின் விவரம்: 

1. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை - எம்.ஆர்.ஆர். எம்.ஏ.வி.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அண்ணா பஸ் நிலையம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் எதிரில், மதுரை -20. தொலைபேசி எண்: 0452-2531754 

2. திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி - ஏ.டி.எம்.ஆர்.சி.எம். வாசவி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 11, பேர்ட்ஸ் சாலை, கன்டோன்மென்ட் பகுதி, திருச்சி -01. தொலைபேசி எண்: 0431-2416648 

3. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி - சாரதா பாலமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராஜாஜி சாலை, சேலம் -7. தொலைபேசி எண்: 0427-2412160 

4. திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் - ஸ்ரீ மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் பஸ் நிலையம் அருகில், கும்பகோணம்-01. தொலைபேசி எண்: 0435-2431566 

5. சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் - ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 319, ஜி.எஸ்.டி. சாலை, குரோம்பேட்டை, சென்னை - 44. தொலைபேசி எண்: 044-22417714

Comments

Popular posts from this blog