தகுதி இல்லாத ஆசிரியர்கள், கவலைப்படாத அரசு-Dinamalar Article கடந்த 2009ம் ஆண்டு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒரு முக்கியமான அம்சம், பள்ளிஆசிரியர்களின் தகுதி குறித்தது. இதுதான், தமிழக சட்டசபையில் விவாதம் நடத்தக் கூடிய அளவிற்கு கொந்தளிப்புகளை ஏற்படுத்துகிறது. பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்க, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், 2011-ம் ஆண்டு, விதிமுறைகளை வெளியிட்டது. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்க, புதிதாக வேலைக்கு சேரும் ஆசிரியர்கள், பி.எட்., அல்லது டி.டி.எட்., படித்திருக்க வேண்டும். மேலும், அவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், மத்திய அரசு நடத்தும் பள்ளிகளுக்கு, மத்திய அரசின் சி.டெட்.,டும், தமிழக அரசு பள்ளிகளுக்கு டி.என்.டெட்.,டும் தகுதி தேர்வுகள். எந்த நிதி உதவியும் பெறாத தனியார் பள்ளிகள், இவற்றில் ஏதேனும் ஒன்றை ஏற்கலாம்.ஏற்கனவே வேலையில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும், சட்டம் அமலுக்கு வந்த ஐந்து ஆண்டுகளுக்குள், தகுதி தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கல்வி உரிமை சட்டத்தின் ஷரத்து 23(2) கூறுகிறது. ஆனால், இது குறித்து குழப்பங்களே நிலவுகின்றன. சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சில, தங்கள் ஆசிரியர்களை சி.டெட்., தேர்வை எழுதி தேர்ச்சி பெறுமாறு சொல்லியுள்ளன. ஆனால், சமச்சீர் கல்வி திட்டத்தின் படி இயங்கும் தனியார் பள்ளிகளுக்கோ, தமிழக அரசு பள்ளிகளுக்கோ, இது குறித்த தமிழக அரசு ஆணை எதுவும் அனுப்பப்பட்டதாக தெரியவில்லை.தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம், ஒவவொரு ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்துகிறது. ஆனால், தகுதி தேர்வில் அனைத்து ஆசிரியர்களும் தேர்ச்சி பெற, இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில், தமிழகத்தில் உள்ள 99 சதவீத ஆசிரியர்கள், இதில், இன்னும் தேர்ச்சி பெறவில்லை. இது குறித்து, மாநில அரசும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. காலக்கெடு முடிந்தபின் மாநில அரசு என்ன செய்யும்?திடீரென ஒரு நாள் விழித்துக்கொண்டு, கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து ஆசிரியர்களும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றுத்தர லாயக்கற்றவர்கள் என்று, கண்டுபிடிக்குமா? வழக்கம் போல், ஆசிரியர் தகுதிதேர்வுக்கு எதிராக குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து உள்ளன. 'ஏற்கனவே, நாங்கள் பி.எட்., அல்லது டி.டி.எட்., படித்துவிட்டு தானே வந்திருக்கிறோம்; அதற்குமேல்இந்த தகுதி தேர்வு எதற்கு' என்கின்றனர், ஆசிரியர்கள். ஆனால், இப்படி படித்துவிட்டு வந்தவர்களால் ஆசிரியர் தகுதி தேர்வை வெற்றிகரமாக எழுதி, தேர்ச்சிபெற முடியவில்லை என்பது தான் நிலைமை.தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகளின் தகுதி தேர்வுகளை, ஒவ்வொரு முறையும், 6 - 10 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில், மத்திய அரசின் தேர்வில் - 2012ல், 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களும்; 2013ல், 11 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றனர். மாநில அரசின் தேர்வில் - 2012ல், 1சதவீதத்திற்கும் குறைவானவர்களும்; 2013ல், ஏறத்தாழ 4 சதவீதத்தினரும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.ஆசிரியர்களின் திறன் நிலை இப்படி இருக்க, நாம் சில தீவிரமான கேள்விகளை எழுப்ப வேண்டி உள்ளது: 1.பி.எட்., அல்லது டி.டி.எட்., கல்வி முறை மோசமாக இருக்கிறதா? அதில் தேர்ச்சி பெற்று வெளியே வருபவர்களிடம், ஆசிரியர்களாக ஆகும்தகுதி இல்லை என்பதால் தான், தகுதி தேர்வு தேவைப்படுகிறதா? ஆம் எனில், தரமற்ற பயிற்சியை தரும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளை என்ன செய்யலாம்? 2.ஆசிரியர் தகுதிதேர்வில், தேர்ச்சி பெறுவோரின் சதவீதத்தை பார்க்கும் போது பகீர் என்கிறது! தங்களுக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் தான்,இன்று, நம் குழந்தைகளுக்கு ஆசிரியர்களாக இருக்கிறார்களா? இவர்களுக்கு, நம் குழந்தைகளுக்கான பாட புத்தகங்களை, கேள்வி தாள்களை தயாரித்து, மதிப்பெண் கொடுப்பதற்கு என்ன தகுதி உள்ளது? 3.இட ஒதுக்கீடு என்பதற்கு, இன்று, தமிழகத்தில் எதிர்ப்பே கிடையாது. ஆனாலும், ஏற்கனவே குறைவாக உள்ள, 60 சதவீதம் என்ற, தேர்ச்சிக்கான மதிப்பெண் விகிதத்தை,ஒரு சில சமூகங்களுக்காக 55 சதவீதம் என, குறைத்தால் அடுத்தடுத்த தலைமுறைகளின் கல்வி மேலும் பாதிக்கப்படாதா? இந்த தகுதி தேர்வை கொண்டுவருவதன் நோக்கமே, மிக தரமான ஆசிரியர்கள் இல்லாவிட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடும் என்பது தானே? 4.சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில், 25 சதவீதம் இட ஒதுக்கீடு கிடையாதுஎன்று, நீதிமன்றம் சொல்லிவிட்டது. கல்வி உரிமை சட்டத்தின் பிற ஷரத்துகளாவது அங்கு செல்லுபடியாகுமா? அங்குள்ள ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதவேண்டுமா அல்லது தேவையில்லையா? இது குறித்து, மாநில அரசு தெளிவுபடுத்துமா? 5.கல்வி உரிமை சட்டம் இயற்றப்பட்டு ஐந்தாண்டுகள் விரைவில் முடியப்போகின்றன. வரும், மார்ச் 31, 2015க்குள், எப்படியும், தமிழக ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்றுவிடப் போவதில்லை.அப்போது யாரேனும் கல்வி உரிமை சட்டத்தின் ஷரத்துகளின் அடிப்படையில், ஏன் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை என்று, தமிழக அரசின் மீது பொது நல வழக்கு தொடரலாம். தமிழக அரசும், மத்திய அரசும் என்ன பதில் சொல்லும் அப்போது? 6.கல்வி துறைக்கு, ஒவ்வொரு ஆண்டும், ஏறத்தாழ 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கும் தமிழக அரசு, இத்தகைய அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாமா?பணத்தை கொட்டினால் மட்டும் கல்வி திறம் மேம்படுமா?

Comments

  1. For attention ALL Maths TET already CV attended candidates : Visit TNTETMATHS.BLOGSPOT.IN to know your position.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog