ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண்ணை நீட்டிக்க கோரிக்கை ---தின மணி நாளேடு தமிழகத்தில் 2013-ஆம் நடைபெற்ற தகுதித்தேர்வில் பங்கேற்றவர்களில், இடஒதுக்கீட்டு பிரிவினரின் கோரிக்கையை ஏற்று 60 சதவீத மதிப்பெண்களில் இருந்து, 5 சதவீதம் விலக்கு அளித்தது போன்று, 2012-ஆம் ஆண்டு தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2012-இல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 55 சதவீதம்(82-89) மதிப்பெண் பெற்ற மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் சார்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தங்களின் ஆட்சியில் மாணவர்களுக்கு சிறப்பான மற்றும் தரமான கல்வியை வழங்குவதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு(டிஇடி) மூலம் பல்லாயிரக்கணக்கான சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து பணி நியமனம் செய்து வருவது மகிழ்ச்சிக்குரியது. 2013-ம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் கோரிக்கையை ஏற்று, 60 சதவீத மதிப்பெண்ணிலிருந்து 5 சதவீதம் விலக்கு அளித்து, 55 சதவீதம் மதிப்பெண்களை சலுகை மதிப்பெண்களாக வழங்கி, ஏராளமானோருக்கு ஆசிரியர் பணி கிடைக்கச் செய்து, அந்தக் குடும்பங்களில் ஒளிஏற்றி வைத்துள்ளீர்கள். இதேபோன்று, 2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற தகுதிதேர்வுக்கும் இச்சலுகை மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அந்த ஆண்டில் தேர்வெழுதிய எங்களுக்கும் 5 சதவீத சலுகை வழங்கி, 82-89 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் தகுதிச் சான்று மட்டுமாவது, இப்போதைக்கு வழங்கினால், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஏற்கெனவே நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பணியை தடையின்றி தொடர்வதற்கு வாய்ப்பாக அமையும்.

Comments

Popular posts from this blog