ஓராண்டாக தொடரும் ஆசிரியர்கள் பற்றாக்குறை: மாணவர்களின் கல்வி பாதிப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர், மேல்நிலைப்பள்ளியில் 232 ஆசிரியர் காலி பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படவில்லை. அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன் தேர்ச்சி சதவீதம் குறையும் வாய்ப்புள்ளது. இம்மாவட்டத்தில் 124 அரசு உயர், மேல்நிலை, 2 ஆதிதிராவிடர், 53 அரசு உதவி பெறும் உயர், மேல்நிலை, 48 மெட்ரிக் என, 227 பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 470 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் 122 இடங்கள் கடந்த கல்வி ஆண்டு முதல் காலியாக உள்ளன. இவற்றில் 73 இடங்களில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.அனுமதிக்கப்பட்ட 1096 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 33 ஆங்கிலம், 87 சமூக அறிவியல் பாட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 1566 முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 232 இடங்கள் காலியாக உள்ளன. மேலும் சில இடங்களில் பள்ளிக் கல்வித்துறை அனுமதிக்காத ஆசிரியர் பணியிடங்கள், தொடர்ந்து காலியாக உள்ளன. வரும் கல்வியாண்டிலும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் பாதிப்பதுடன், தேர்ச்சி சதவீதம் குறையும் நிலை நீடிக்கிறது. 100 சதவீதம் தேர்ச்சி: கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 61 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 10 பள்ளிகள், பத்தாம் வகுப்புதேர்வில் 124 அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 32 அரசு பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில் 17 தனியார் மேல்நிலைப்பள்ளிகள், பத்தாம் வகுப்பு தேர்வில் 53 தனியார் உயர், மேல்நிலை, மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்தன. தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகள்: தொண்டி (ஆண்கள்), திருவாடானை (ஆண்கள்), கடுக்காய்வலசை, ரெகுநாதபுரம், நயினார்கோவில், எமனேஸ்வரம், கமுதி, திருமாலுகந்தான் கோட்டை, பாண்டுகுடி, மஞ்சூர் ஆகிய 10 அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மே 31ல் ஓய்வு பெற்றனர். இப்பள்ளிகளின் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சிசதவீதம் 70க்கு குறையவில்லை. வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி இலக்கை அடைய வேண்டுமென பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பழனிச்சாமி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், துவக்கமே தலைமை ஆசிரியர்கள் இல்லை என்ற நிலையில் அரசு பள்ளிகள் உள்ளன. மேலும் நூறு சதவீத மதிப்பெண் எடுக்கக்கூடிய பாடங்களுக்கு ஓராண்டுக்கும் மேலாக ஆசிரியர் இல்லை என்பது கவலையளிக்கும் விதத்தில் உள்ளது.முதன்மைக்கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், "பொது இட மாறுதல் முடிந்ததும், காலி பணியிடங்களில் ஆசிரியர்கள் நிரப்பப்படுவர்" என்றார்.

Comments

Popular posts from this blog