ஆசிரியர் நியமனம்: புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அறிவிப்பு
இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை தொடர்பாக அரசாணையை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே இருந்த முறையுடன் ஒப்பிடும்போது இந்தப் புதிய முறையில் ஒவ்வொரு மதிப்பெண் சதவீதத்துக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அடுத்த 2 வாரங்களில் இந்த ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று 29 ஆயிரம் பேரும், 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு 45 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.
இவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவடைந்த நிலையில், பழைய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை ரத்து செய்யப்பட்டதால் தேர்வுப் பட்டியல் வெளியிடுவது தாமதமாகி வந்தது.
இப்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 74 ஆயிரம் பேரில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம்:
இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது.
இதில் மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அதேபோல், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், பட்டப் படிப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
இதில் மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் இருக்கும்.
முந்தைய முறையில் குறிப்பிட்ட சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவருக்கும் ஒரே வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்தப் புதிய முறையில் ஒவ்வொரு சதவீத மதிப்பெண்ணுக்கும் ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண் கிடைக்கும் வகையில் மதிப்பிடும் முறை மாற்றப்பட்டுள்ளது.
ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஒரே வெயிட்டேஜ் மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களின் பிறந்த தேதி தேதி அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றம் என்ன? ஏற்கெனவே இருந்த வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக இருந்தது. இதில் பிளஸ் 2 தேர்வில் 90 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் 15 மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய முறையில் 91 சதவீத மதிப்பெண் பெற்றவருக்கு 13.65 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 92 சதவீத மதிப்பெண் பெற்றவருக்கு 13.80 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 93 சதவீத மதிப்பெண் பெற்றவருக்கு 13.95 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் கிடைக்கும்.
அதேபோல், பழைய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீதத்துக்குக் கீழ் மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படவில்லை. இந்தப் புதிய முறையில் அவர்களுக்கு 7.5 வெயிட்டேஜ் மதிப்பெண் கிடைக்கும்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment