பட்டதாரி ஆசிரியர் மதிப்பெண் வெளியீடு: 30ம் தேதி 11 ஆயிரம் பேர் இறுதி பட்டியல்

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின், இறுதி மதிப்பெண் விவரம், டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதையடுத்து,30ம் தேதி வெளியாகும் இறுதி பட்டியலில், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த, 10,726 பேரின் பெயர் வெளியாகும். 

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடிவுக்கு வந்தன. இதையடுத்து, தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணியை, டி.ஆர்.பி., மும்முரமாக செய்து வந்தது. 

இணையத்தில் வெளியீடு: இப்பணி முடிந்ததை அடுத்து, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின் இறுதி மதிப்பெண் விவரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. 

இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர், அறிவொளி கூறியதாவது: பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில், பின்னடைவு பணியிடங்கள் (பேக் லாக் வேகன்சிஸ்) மற்றும் 2012 - 13க்கான காலி பணியிடங்கள் ஆகியவற்றுக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர், ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர். 

5 தேர்வுகள்: கடந்த, 2012 டி.இ.டி., தேர்வு, அதே ஆண்டின் இறுதியில் நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வு, 2013, ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வு மற்றும் தேர்ச்சி மதிப்பெண்ணில், தமிழக அரசு அளித்த, 5 சதவீத சலுகை காரணமாக தேர்ச்சி பெற்றவர்கள், ஊனமுற்றோர்களுக்கு, சமீபத்தில் நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வு என, ஐந்து தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின், இறுதி மதிப்பெண், புதிய அரசாணையின் அடிப்படையில், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

குறை இருந்தால்...: தேர்வர்கள், டி.இ.டி., தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்தால், இறுதி மதிப்பெண் விவரம் உள்ளிட்ட, அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்ணில் ஏதாவது வித்தியாசம் இருந்தால், இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மையங்களுக்கு சென்று, உரிய ஆதாரங்களை காட்டி, குறையை சரி செய்து கொள்ளலாம். 

மதிப்பெண் விவரம் சரியாக இருந்தால், அவர்கள், எந்த காரணம் கொண்டும், சிறப்பு மையங்களுக்கு செல்லக்கூடாது. இந்த சரிபார்ப்புகளுக்குப் பின், வரும், 30ம் தேதி, பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். 10,726 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு, அறிவொளி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog