10,500 பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியீடு -- தின தந்தி

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதி தேர்வு இந்தியாவில் அரசு பணியில் மட்டுமல்ல, அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருந்தாலும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற புதிய விதிமுறையை கடந்த சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்தது. 

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனியாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாகவும் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. 3–வது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள்.தேர்வு முடிவு கடந்த வருடம் நவம்பர் மாதம் 5–ந்தேதி வெளியிடப்பட்டது. 

இந்த தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்ச்சி சதவீதம் 60 என்று இருந்தது. பின்னர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்ச்சி சதவீதத்தை இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 55 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இதை கல்வியாளர்கள், ஆசிரியர் படிப்புக்கு படித்தவர்கள் ஏராளமானவர்கள் வரவேற்றனர். ஜெயலலிதாவின் அறிவிப்பை தொடர்ந்து தேர்ச்சி மதிப்பெண் 82 என்று பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை பிறப்பித்தார். 

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு பின்னர் ஆசிரியர் வேலைவாய்ப்புக்கு அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் மட்டும் போதாது. அவர்கள் ஏற்கனவே ஆசிரியர் பயிற்சியில் பெற்ற மதிப்பெண், பள்ளிக்கூட பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றுக்கும் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் பட்டதாரி ஆசிரியர்களாக 10 ஆயிரத்து 500 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பட்டியல் இடை நிலை ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க தனியாக முகாம் நடத்தப்படுகிறது. 

அதன்பிறகுதான் இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும். இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபுனய்யார், உறுப்பினர் அறிவொளி ஆகியோர் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog