முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு : விரைவில் பணி நியமன ஆணை --- தின மலர் 

முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நேற்று வெளியிட்டது.தமிழக அரசு பள்ளிகளில், மேல்நிலைப் பள்ளிகள் அளவில், காலியாக இருந்த, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், தமிழ் பாடத்திற்கான இறுதி தேர்வு பட்டியல், பல மாதங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டு, பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டன.

இந்நிலையில், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட, பாடங்களுக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள், ஜனவரியில் வெளியிடப்பட்டன. இதில், சிக்கல்கள் எழுந்து வழக்கு தொடரப்பட்டதால், முதுகலை ஆசிரியர் நியமனம் தாமதமாகியது. கோர்ட்டில், சமீபத்தில், இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளாதார பாடங்கள் தொடர்பான உத்தரவு வெளியானது.

இந்த உத்தரவின் படி, ஆசிரியர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், எஞ்சியுள்ள ஆங்கிலம், கணிதம், தாவரவியல், உயிரியல், நுண் உயிரியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில், 1,326 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, தகுதியானவர்கள் பட்டியலை டி.ஆர்.பி., வெளியிட்டது. பட்டதாரி ஆசிரியர்கள்ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) வெற்றி பெற்ற, 43,242 பேரின் இறுதி மதிப்பெண் பட்டியலை, கடந்த மாதம், 14ம் தேதி, டி.ஆர்.பி., வெளியிட்டது. 

இதில், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த, 10,726 பேரது பட்டியல், விரைவில் வெளியாகும் என,அறிவிக்கப்பட்டது. இதன்படி, பட்டதாரி ஆசிரியர்கள், 10,726 பேருக்கான தேர்வுப்பட்டியலையும், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த பட்டியல், சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இம்மாத இறுதிக்குள், இவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது. இடை நிலை ஆசிரியர்கள் இவர்கள் தவிர, இடை நிலை ஆசிரியர்கள், 4,000 பேருக்கான இறுதிப்பட்டியலும், இந்த மாத இறுதிக்குள் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கும் விரைவில், பணி நியமனம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog