விண்ணப்பங்கள் அனுப்பும்போது சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும்முறை ரத்து நரேந்திர மோடி உத்தரவு 

விண்ணப்பங்கள் அனுப்பும்போது, சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை ரத்தாகிறது. இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். 

சீர்திருத்த நடவடிக்கை

 நரேந்திர மோடி, கடந்த மே மாதம் 26–ந் தேதி பிரதமர் பதவி ஏற்றதுமுதல், மக்கள் பலன் அடைகிற விதத்தில் அரசு நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 4–ந் தேதி தன்னை சந்தித்த பல்வேறு துறை செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போதும் அவர், பொதுமக்கள் பலன் அடையத்தக்க விதத்தில் அரசு நடைமுறை காரியங்களில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக விவாதித்தார். 

சான்றளிப்பு முறை அந்த வகையில், தற்போது மாணவர்கள், பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளில், அரசு நிறுவனங்களில் வேலை பெறவும், கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கும், வேலை வாய்ப்பு தேர்வுகள் எழுதுவதற்கும் விண்ணப்பிக்கிறபோது, அத்துடன் கல்விச்சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவற்றின் ஜெராக்ஸ் நகல்களை ‘கெஜட்டட் ஆபிசர்ஸ்’ என்று அழைக்கப்படுகிற அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளின் சான்றளிப்பு பெற்று இணைக்கிற நடைமுறை உள்ளது. 

இப்படி சான்றளிப்பு பெறுவதற்கு அரசு அதிகாரிகளை தேடி அலைவதில் பொதுமக்களுக்கு நேரமும், பயணச்செலவும் விரையமாகிறது. அதிகாரிகளுக்கு நேரம் விரையமாகிறது. இந்த சான்றளிப்பு முறையை முடிவுக்கு கொண்டு வந்து, நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்பி அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.

 சுய சான்றளிப்பு அந்த வகையில் இனி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளின் சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெற்று பயன்படுத்துவதற்குப் பதிலாக விண்ணப்பதாரர்களே தங்களது சான்றிதழ் நகல்களை சுய சான்றளிப்பு செய்யும் நடைமுறை வருகிறது. நேர்முகத்தேர்வு போன்ற கடைசி கட்ட நடவடிக்கையின்போது, அசல் சான்றிதழை கொண்டு வரச்செய்து உறுதி செய்துகொள்ளப்படும். இந்த நடைமுறையை கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இதற்கான வழிவகைகளை செய்யுமாறு மத்திய அரசின் அனைத்து துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகளுக்கு, யூனியன் பிரதேசங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 

இந்த தகவல்களை பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். தவறு செய்தால் நடவடிக்கை இந்த சுய சான்றளிப்பு முறையினைப் பயன்படுத்தி யாரேனும் தவறாகவோ, பொய்யாகவோ சுய சான்றளிப்பு செய்தால், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பாயும் எனவும் அவர் எச்சரித்தார்.

Comments

Popular posts from this blog