சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் நியமிக்க கோரிக்கை

மாணவர்களின் கல்வி தரம் பாதிக்காமல் இருக்க, பதிவு மூப்பு அடிப்படையில்,ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என, ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், தஞ்சாவூரில் நடந்தது. புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப் பாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்க மாநில தலைவர் ராகராமு, மாவட்ட தலைவர் சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தானர்.

 பதிவு மூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரி பார்ப்பை முடித்து, நிலுவையில் உள்ள, 6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி வேலை வழங்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு, இரண்டு ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. 

இதனால், பாதிப்படைந்த பட்டதாரி ஆசிரியர்கள் நிலையை கருதி, தாமதம் இன்றி வேலை வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனால், ஆசிரியர் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருப்போர் பணி பெற முடியாத நிலை உள்ளது. 

தற்போது, ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும் பணி நியமனம் பெற முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதை, தமிழக அரசு கருத்தில் கொண்டு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும், என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், தமிழாசிரியர் சங்க மாநில செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர்கள் அரசுமணி, சங்கர், இளவரசன், பழனியாயி, செல்வராஜ், தியாகராஜன், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog